Pages

Wednesday, July 18, 2012

ஒளியும் இருளும்





ஒளியா இருளா வலியது எதுவோ?
ஒளியைக் கண்டால் விலகுது இருளும்.
விலகலே அன்றி அழிதல் இல்லை.
ஒளி மறைந்த பின் மீண்டும் வருகை
முழுமையாக இருளை ஒழித்து
ஒளி ஒரு நாளும் வென்றது இல்லை
பதுங்கித் தாக்கல் இருளின் தனி வழி

ஒளியும் இருளும் பலத்தில் சமமா?
இருளே அதிகம் ஆட்சி செய்வது
ஒளியின் வீச்சைத் தடுப்பன பொருள்கள்
இருளின் வீச்சை எவரும் தடுக்கிலர்.
ஒன்றின் வேரை மற்றது அறுத்து
அழிக்காததனால் எதிரிகள் அல்லர்.

இருளும் ஒளியும் இயல்பினில் நட்போ?
இருவரும் சேர்ந்து செல்வது இல்லை
இருவரும் பிரிந்து வாழ்வதும் இல்லை

என்ன தான் உறவு இவர்களுக்குள்ளே?


1 comment:

  1. தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகி
    தண்ணீரின் போக்கைத் தடுப்பதுபோல
    ஒளியே உறைந்து பருப்பொருளாகி
    ஒளியின் போக்கைத் தடுத்து உட்கொண்டு
    நிழல் எனும் மாயை தந்தது காணீர்!
    கண்ணுக்குத் தெரிவது ஓளியானால்
    கண்ணுக்குத் தெரியாத ஓளி நிழலாகாதோ?
    ஒளியை வெள்ளை நிழல் என்போம்,
    நிழலைக் கறுப்பு ஒளி என்போம்!

    ReplyDelete