Pages

Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Thursday, February 20, 2014

குலதெய்வம்


      ரயில் சென்னையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுந்தரேசனின் மனம் மும்பையின் நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தான் எத்தனை மாற்றங்கள்!  இன்று ரயிலில் பயணம் செய்வோம் என்று நேற்று இந்நேரம் அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. வலுக் கட்டாயமாக அல்லவா என்னை ரயில் அனுப்பி வைத்து விட்டாள். என் நலத்தை விரும்பித் தான் சொல்கிறாள். எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து தப்பினால் சரி என நினைத்துக் கொண்டான்.
      நேற்று ஜோதிடரைச் சந்தித்தது இவ்வளவு நீண்ட பயணத்தில் கொண்டு விடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தொழில் மந்தம் என்பது தற்போது உலகில் எல்லா நாடுகளுக்கும் உள்ள பிரச்சனை. ஆனால் இவன் விஷயமே வேறு. தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்டியது என்கிற மாதிரி அமெரிக்காவிலிருந்து இவனுடைய சிறு தொழிலுக்கு மூலப் பொருள் அனுப்பி வந்த கம்பெனி மூடப்பட, இவன் தொழில் படுத்து விட்டது. அதே பொருளை உள் நாட்டில் ஒரு நிறுவனத்தில் வாங்கப் போய் இவனுடைய சரக்கின் தரம் குறைந்தது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராகக் கழன்று விட்டனர். வங்கியில் முடிந்த அளவுக்குக் கடன் வாங்கியாகிவிட்டது. தொழிலாளர்களையும் வேலையை விட்டு நீக்க முடியவில்லை. அடுத்த மாதம் சம்பளம் கொடுக்க வழி இல்லை என்ற நிலையில், அந்தப் பாலக்காட்டு ஜோதிடரைப் பற்றி அவன் மனைவி சொன்ன போது அரை மனதாக ஒப்புக் கொண்டான். அவனுக்குப் பொதுவாக, ஜோதிடம் மாந்திரீகம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்றாலும் துன்பம் மிகும்போது யார் எது சொன்னாலும் கேட்கக் கூடிய மன நிலைக்கு வந்து விடுகிறோம் அல்லவா?
      ஜோதிடர் சோழி போட்டுப் பார்த்து என்னென்னவோ கணக்குகள் போட்டு, நீங்கள் குல தெய்வத்தை மறந்து விட்டீர்கள். அதனால் தான் உங்களுக்கு இத்தனை தொல்லைகள் என்றார். அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இவன் குல தெய்வத்தை மறந்ததனால் அமெரிக்கக் கம்பெனி மூடப்பட்டது என்பது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. என்றாலும் எதிர் வாதம் செய்யும் மன நிலையில் அவன் இல்லை.
      குல தெய்வம் என்றால் என்ன?” சோதிடரைக் கேட்டான். உங்கள் குலத்துக்கு என்று ஒரு தெய்வம் இருக்கும். உங்கள் மூதாதையர் வணங்கி வந்திருப்பார்கள். வீட்டில் பெரியவர்கள் அல்லது உங்கள் தாயாதி பங்காளிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.
      தெய்வம் ஒன்று தான், அதைப் பலரும் பல பெயர்களில் வணங்குகிறார்கள் என்பது தான் அவனுடைய கல்வி அவனுள் ஏற்படுத்தியிருந்த நிலைப்பாடு. இவர் ஏதோ உன்னுடைய குலத்துக்கு என்று ஒரு தனித் தெய்வம் இருக்கிறது என்கிறார். அப்படியே இருந்தாலும் வணங்காமல் விட்டு விட்டதால் அது துன்பம் கொடுத்துப் பழி வாங்குகிறது என்றால் அதைப் போய்த் தெய்வம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது? அவன் குழம்பிக் கொண்டிருந்தான்.
      அவன் மனைவிக்கு அந்தக் குழப்பம் எதுவும் இல்லை. வீட்டுக்கு வந்தவுடன் நம் குடும்பத்துக்குக் குல தெய்வம் எது?” என்று அவனுடைய அம்மாவிடம் கேட்டாள்.
      கொட்டூர் ஐயனார்னு சொல்வாங்க. நானே ஒரு தடவை தான் கல்யாணம் ஆன புதுசில் போயிருக்கிறேன். இவனுடைய அப்பாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் மாமனார் வற்புறுத்தி கல்யாணம் ஆன கையோடு அழைத்துப் போனார்.
                அது எங்கே இருக்கு?’
                மாயவரம் போய் பஸ்ஸிலே போனோம். எந்தப் பக்கம்னு தெரியல்லே.
      மணி பத்து ஆயிற்று. கால தாமதம் செய்யாமல் அவனது மனைவி தத்காலில் தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் சென்னைக்கு ஒரு டிக்கெட் புக் செய்தாள். கூகுள் ஆண்டவர் உதவியால் மாயூரம் என்ற மாயவரம் என்பது தற்போது மயிலாடுதுறை என்று அழைக்கப்படுகிறது என்பதையும் சென்னையிலிருந்து நாள் பூராவும் அடிக்கடி பஸ் போகிறது என்ற விவரத்தையும் தெரிந்து கொண்டாள். மயிலாடுதுறையில் இறங்கி கொட்டூருக்குப் போகும் வழியை விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். நான் நாளைப் பயணத்துக்கான ஆகாரம் தயார் செய்கிறேன் என்று உள்ளே போய்விட்டாள். இவனைப் பேசவே விடவில்லை.
      அவன் அம்மா முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு, போய்ப் பார்த்து விட்டு வா. எந்தத் தெய்வமாவது கண்ணைத் திறக்கட்டும் என்று சொன்னாள்.
      நம்பிக்கை இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் அவன் இதற்கு உட்பட்டான். இரவு தாதரிலிருந்து கிளம்பியாயிற்று. பன்னிரண்டு மணி நேரம் பயணம் பெரும்பாலும் தூக்கத்தில் போய் விட்டது. இன்னும் பன்னிரண்டு மணி நேரம் பகல் பொழுது போக வேண்டும். இதுவே சென்ற வருடமாக இருந்தால் அவன் ரயில் பயணத்தில் நேரத்தை வீணாக்கமாட்டான். விமானத்தில் வந்து போய் விடுவான். ஆனால் இன்று நிலைமை வேறு. விமானக் கட்டணத்துக்கு உள்ள காசில் ஒரு தொழிலாளிக்குச் சம்பளம் கொடுக்கலாம். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டான்.
      காலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கி பல பேரை விசாரித்த பின் ஒரு நடத்துனர் சொன்னார், கொட்டூர் தானே? ஏறி உக்காருங்க.
      அரை மணி கழித்து, கொட்டூர் நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டு பேருந்து போய் விட்டது. இறங்கினவன் திரு திரு என்று விழித்தான். கண்ணுக்கெட்டியவரை வீடா வேறு கட்டிடங்களா காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பசுமையான வயல்கள் தான். இப்படி நடுக்காட்டில் இறக்கி விட்டுப் போய் விட்டார்களே, விசாரிக்கலாம் என்றால் ஒரு மனித ஜீவனைக் கூடக் கண்ணில் காணோமே என்று அலுத்துக் கொண்டான்.
      அங்கே ஒரு மண் சாலை பிரிந்து சென்றது. அதன் முகப்பில் ஒரு காங்கிரீட் முகப்பு வளைவு தென்பட்டது. அதில் கொட்டூர் ஐயனார் கோவில்  கும்பாபிஷேக விழா வளைவு என்று எழுதி இருந்தது. இந்தச் சாலையில் போக வேண்டும் போல் இருக்கிறது. எவ்வளவு தூரம் போக வேண்டுமோ, சரி போவோம். வந்தாயிற்று. எது வந்தாலும் அனுபவிக்கத் தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நடந்தான்.
      ஊர் எல்லையிலேயே ஐயனார் கோவில் இருந்தது. பூட்டி இருந்தது. அங்கே விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் கேட்டான். இந்தக் கோவில் எப்போ திறப்பாங்க?’ 
      பூசாரியார் வீட்டுக்குப் போய்க் கேளுங்க. வாங்க அழைச்சிட்டுப் போறேன்.
      பூசாரி வீடு மண் குடிசை. முன்னும் பின்னும் தோட்டம். கொல்லையில் மாட்டுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த பூசாரி சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தார்.
      வாங்க, எங்கேருந்து வரீங்க?’
      மும்பையிலிருந்து. இந்த ஐயனார் எங்களுக்குக் குல தெய்வம்னு சொன்னாங்க. பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.
      நீங்க இது வரைக்கும் இங்கே வந்ததில்லையே? யாரு வீடுன்னு தெரியல்லியே. உங்க அப்பா பேரு என்ன?”
                ராமநாதன்.
                ராமநாதனா? தெரியல்லியே. உங்க தாத்தா பேரு?’
                சாம்பசிவம்.” 
                ஓகோ, நம்ம சாம்பசிவம் ஐயா பேரனா நீங்க? ரொம்ப வருஷத்துக்கு முந்தி உங்க அப்பா ஒரு தடவை வந்துட்டுப் போனாரு. ரொம்ப நாளா குல தெய்வத்தை மறந்துட்டீங்க. பரவாயில்லே. இப்பவாவது நினைச்சுக்கிட்டு வந்தீங்களே. இந்த ஐயனார் ரொம்ப சக்தி வாய்ஞ்சவருங்க. ஒரு நடை வந்துட்டுப் போய்ட்டால் நினைச்ச காரியம் நடக்கும். நடத்திக் குடுத்துடுவாரு.
      அபிஷேகம் பண்ணணும். எவ்வளவு ஆகும்?”
      காசு கிடக்குங்க. வீட்டிலே மாடு கறக்குது. பால் எடுத்துக்கலாம். கொல்லையிலே தென்னை மரம் இருக்கு. இளநீ பறிச்சுக்கலாம். நல்லெண்ணை மட்டும் கால் லிட்டர் வாங்கினாப் போதும். அதுக்குள்ள காசைக் குடுங்க. அப்புறம் காசு இருந்தா எனக்கு ஏதாவது தட்சிணை கொடுங்க. உங்க தாத்தா வருஷம் தவறாமே வந்துட்டுப் போவாரு. அவரு இந்நேரம் போயிருப்பாருன்னு நினைக்கிறேன். இருந்தா வராம இருக்க மாட்டாரு. உங்க அப்பா அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா?”
      அப்பா போய் இருபது வருஷம் ஆவுது. அம்மா மும்பையிலே என்னோட இருக்காங்க.
      சரி. பல் விளக்கீட்டிங்களா?”
      இல்லே. மயிலாடுதுறையிலே பஸ் ஏறி நேரே இங்கே தான் வரேன்.
      சரி. பையை இங்கே வைங்க. பையனை அனுப்பறேன். தோப்புக்குப் போய்ட்டு வாங்க. அங்கேயே குளத்திலே பல் விளக்கிட்டு வாங்க. வந்ததும் டீயைக் குடிச்சிட்டு கோவிலுக்குப் போகலாம். கோவில் கிணத்திலேயே குளிச்சிடலாம். மத்தியானம் ஒரு மணிக்குள்ளே பூசை முடிஞ்சு பிரசாதம் வாங்கிக்கலாம். இந்த ஊரிலே ஓட்டல் கீட்டல் கிடையாது. அதனாலே இந்தப் பிரசாதம் தான் மதியத்துக்கு உங்களுக்கு. திரும்ப மும்பை தான் போறீங்களா, இங்கே பக்கத்திலே வேறே வேலை இருக்கா?”
      இன்னிக்கி சாயங்காலம் மயிலாடுதுறைலே பஸ் ஏறி நாளைக் காலைலே ஏழு மணிக்கு சென்னையிலே ரயிலைப் பிடிக்கணும். 
      பூஜைகள் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. பத்து மணிக்கு நாளைய தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்திருந்தான். அங்கே சுற்றுவட்டாரத்தில் ப்ரௌசிங் சென்டர் என்று எதுவும் இல்லை என்பது தெரிந்தது. சரி, பரவாயில்லை. நாளை அன்ரிசர்வ்டில் போக வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்டான்.
      முப்பத்தைந்து வருடமாகத் தன்னை வந்து பார்க்கவில்லை என்பதற்காக எப்படி எல்லாமோ காய்களை நகர்த்தித் தன்னை இங்கு வரவழைத்த அந்த ஐயனாரைத் தரிசனம் செய்து கொண்டான். கோவிலிலேயே சாப்பிட்டுவிட்டுக் கிணற்றங்கரையில் கை கழுவி விட்டு வரும்போது தான் ஐயனாருக்கு இன்னும் கோபம் தணியவில்லை என்பது தெரிந்தது. படி தடுக்கிக் கீழே விழுந்து விட்டான். கையை ஊன்றி எழுந்திருக்க முயலும்போது கையில் பயங்கர வலி.
      பதறிக் கொண்டு ஓடி வந்தார் பூசாரி. படி இருக்கு, பார்த்து வரக்கூடாதா? சம தரையிலேயே நடந்து பழகி இருப்பீங்க போல. மெதுவா எழுந்திரிங்க.
      எழுந்தான். தாங்க முடியாத வலி. கையைத் தூக்க முடியவில்லை. பூசாரி பார்த்தார். கை எலும்பு முறிஞ்சிருக்குங்க. அது தான் இந்த வலி வலிக்குது. வலது கையாச்சே. ரொம்பக் கஷ்டமா இருக்குமே. வாங்க வீட்டுக்குப் போவோம். மருந்து போட்டுக்கலாம்.
                இங்கே பக்கத்திலே டாக்டர் யாராவது இருக்காங்களா?”
      டாக்டரா, மயிலாடுதுறைக்குத் தாங்க போகணும். எலும்பு முறிவுக்கு டாக்டர் கிட்டே போய்ப் பிரயோஜனமில்லீங்க. நல்ல வேளை, நாளைக்குப் புதன் கிழமை. தென்னமரக்குடி வைத்தியரு இருப்பாரு. நீங்க இங்கே தங்கிடுங்க. காலையிலே நான் அழைச்சி்ட்டுப் போறேன்.
      நடந்தாலே கை அதிருது. ஒரு சைக்கிள்  கிடைச்சுதுன்னா என்னை மெதுவா பஸ் ஸ்டாப்பு வரைக்கும் கொண்டு விட்டிருங்க. நான் பஸ் புடிச்சு மயிலாடுதுறையிலே டாக்டர் யார் கிட்டேயாவது காட்டிக்கிறேன்.
      தம்பி, நான் உங்களுக்கு நல்லதுக்குச் சொல்றேன். டாக்டர் கிட்டே போனீங்கன்னா கையைக் கோணல் மாணலா வெச்சு மாவுக் கட்டு போட்டுடுவாங்க. அப்புறம் ஆயுசுக்கும் கை வளைஞ்சே இருக்கும். அப்புறம் உங்க சௌகரியம்.
      அதற்குள் வீடு வந்து சேர்ந்தது. மும்பைக்காரருக்கு கை முறிஞ்சு போச்சுங்கிற தகவல் கிடைச்சு தெரு வாசிகள் அனைவரும் கூடிவிட்டார்கள். எல்லோரும் ஒரு முகமாக, டாக்டர் கிட்டே போகாதீங்க தம்பி. எந்தெந்த ஊரிலே இருந்தோ இங்கே தென்னமரக்குடிக்கு வராங்க. டாக்டர் கிட்ட போய் கையைக் கோணலாக்கிக்கிட்டவங்க இங்கே வந்து சரி பண்ணிட்டுப் போறாங்க. இந்த வட்டாரத்திலே விவரம் தெரிஞ்சவங்க இங்கே தான் வருவாங்க என்று உரிமையோடு உபதேசம் செய்தார்கள்.
      வேறு வழி இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் மூட நம்பிக்கைகளிலேயே  வாழும் இந்த ஊரில் மாட்டிக் கொண்டு விட்டோம். இந்த மக்களின் தயவு இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது. இவர்கள் சொன்னதைக் கேட்டுத் தான் ஆகவேண்டும்.
      பூசாரி கையில் ஏதோ எண்ணையைத் தடவி விட்டு ஒரு பழைய துணியைக் கொண்டு கட்டுப் போட்டார். கையை அசைக்காமல் இருக்க கழுத்திலே சேர்த்துக் கட்டிவிட்டார். வீட்டுத் திண்ணையில் ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு, இதிலே படுத்துங்க. காலைலே பொழுது விடிஞ்சதும் போகலாம் என்றார்.
      மறுநாள் காலையி்ல் பூசாரி அவனைச் சைக்கிளில் பின்புறம் உட்கார வைத்து பஸ் நிறுத்தத்துக்கு அழைத்து வந்தார். மூன்று பஸ் மாறி மெதுவாகத் திருப்புகலூர் வந்தார்கள். ஒரு ஆட்டோ பிடித்து தென்னமரக்குடியை நோக்கிப் போனார்கள். போகிற வழியில் திருப்புகலூர் பாடல் பெத்த தலங்க. அப்பர் முத்தி அடைஞ்ச ஊரு. இதோ வருது பாருங்க, திருக்கண்ணபுரம். சௌரிராஜப் பெருமாள். கோவிலும் பெரிசு. பாருங்க. குளமும் பெரிசு. தென்னமரக்குடி வைத்தியம் என்று பல ஊர்களில் பல பேர் வைத்தியம் செய்றாங்க. அது எல்லாம் போலி. இப்போ நாம போற இடம் தான் உண்மையான பரம்பரை வைத்தியர் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டு வநதார் பூசாரி. இவனுக்கு அதை எல்லாம் கேட்கக் கூடிய மன நிலை இல்லை.
      ஒரு வாய்க்கால் கரையில் ஆட்டோ நின்றது. இரண்டே வீடுகள் தான் அங்கே. ஒரு வீட்டு வாசலில் ஆளோடியில் மக்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். பலர் வெளியில் நின்று கொண்டும் அடுத்த வீட்டில் இருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டும் இருந்தார்கள்.
      சட்டை அணியாத வைத்தியர் வந்து ஆளோடியில் தரையில் உட்கார்ந்தார். நோயாளிகளும் உதவிக்கு வந்தவர்களும் அவரைச் சுற்றி இருந்தார்கள். அந்த சூழ்நிலையைப் பார்த்தால் அது வைத்திய சாலை என்ற எண்ணமே ஏற்படவில்லை அவனுக்கு.
      ஒவ்வொருவராகப் பார்த்து வெளியேற வெளியேற கூட்டம் உட்கார்ந்தபடியே முன் நோக்கி நகர்ந்தது.          இவரிடம் வைத்தியம் செய்து என்ன ஆகப் போகிறதோ என்று பயம் ஏற்பட்டது. பூசாரிக்குத் தெரியாமல் பஸ் ஏறி மயிலாடுதுறை போய் விடலாமா என்று தோன்றியது.
      இவனுடைய முறை வந்தது. கையை அமுக்கிப் பார்த்துவிட்டு, எலும்பு ஒடஞ்சிருக்குங்க. சிம்பு வெச்சுக் கட்டுப் போடறேன். பெசல் எண்ணை தரேன். கட்டின் மேலேயே எண்ணையை தினம் மூணு வேளையும் போட்டு வாங்க. அடுத்த புதன்கிழமை வாங்க. வரும் போது ஒரு கோழி முட்டையும், கொஞ்சம் உளுத்தம்மாவும் கொஞ்சம் வெள்ளைத் துணியும் கொண்டு வாங்க என்றார். மூங்கில் சிம்புகளை வைத்துக் கட்டுப் போட்டார்.
      எண்ணை எவ்வளவு வேணும் என்று வைத்தியர் கேட்டதற்கு அம்பது ரூபாய்க்குக் குடுங்க என்றார் பூசாரி. ஃபீஸ் என்று இழுத்தான். எண்ணைக்கு மட்டும் தாங்க காசு வாங்கறது என்றார் வைத்தியர்.
      இன்னும் ஒரு வாரம் இங்கே தங்கணுமா? போச்சு. எல்லாத் திட்டங்களும் மண். தொழிற்சாலை ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. நானும் இல்லாவிட்டால் சர்வநாசம் தான். ஐயனார் மேல் கோபம் கோபமாக வந்தது. வந்து பார்க்கவில்லை என்று தண்டனை. வந்து பார்த்ததற்கும் தண்டனையா? கை வலியை விட மன வலி தான் பெரிதாக இருந்தது.
      பூசாரி வீட்டுக்கு அழைத்து வந்தார். கைதி போல உணர்ந்தான். இன்னும் ஒரு வாரம் நீங்க என் வீட்டிலேயே தங்கிடுங்க. ஊருக்குப் போன் போட்டுச் சொல்லிடுங்க. ஒண்ணும் யோசனை பண்ணாதீங்க. உங்க தாத்தா குடும்பமும் எங்க தாத்தா குடும்பமும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணா இருந்தவங்க. சந்தோஷமா இருங்க. ஐயனாரு கை விட மாட்டாரு.
      என்ன சொல்வது என்று தெரியவில்லை. வீட்டுத் திண்ணையில் கட்டிலே கதியாகக் கிடந்தான். முடிந்த போது ஐயனார் கோவிலில் போய் உட்கார்ந்தான். ஊர் மனிதர்கள் அடிக்கடி வந்து நலம் விசாரித்து விட்டுப் போனார்கள். இந்தக் கிராம வாசிகளுக்குத் தான் எத்தனை பாசம். நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என்று நினைக்கிறான். ஏதேனும் செய்தால் தான் பாசம் காட்ட வேண்டும் என்ற வணிகக் கலாசாரத்தில் வளர்ந்தவன் அவன்.
      பூசாரி கோவில், வயல் வேலைகளுக்குப் போன நேரம் போக மீதி நேரத்தில்  இவனை நன்றாகக் கவனித்துக் கொண்டார். வேளா வேளைக்கு அவரது மனைவி சாப்பாட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூனுடன் கொடுத்தாள். இடது கையால் சாப்பிடப் பழகிக் கொண்டான்.
      பொழுது போக வேண்டுமே.
      வீட்டிலே டீவி இருக்குங்க. கரண்ட் தான் கிடையாது. ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் தான் வரும். அதுவும் எப்ப வரும்னு சொல்ல முடியாது.
      அவனுக்கு ஒரே பொழுது போக்கு பூசாரியின் மகனும் அவனுடைய நண்பர்களும் தான். இவனுடைய இளமைப் பருவம் சென்னை நகரில் கழிந்தது. கிராமப் புறங்களைப் பார்க்கவோ அந்த வாழ்க்கை முறையைப் பற்றி அறியவோ அவனுக்கு வாய்ப்புக் கிட்டியதில்லை. இப்பொழுது வாய்ப்பும் கட்டாய ஓய்வும் கிடைத்து, சிறுவர்கள் மாமரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவதையும் கிட்டிப் புள், கோலி, பம்பரம் விளையாடுவதையும், சிறுமிகள் பாண்டி விளையாடுவதையும், ஆலாப் பொறுக்கி, ஆரோட சேத்தி என்று நீளமாகப் பாட்டுப் பாடிக் கொண்டே கற்களை விட்டெறிந்து பிடிக்கும் விளையாட்டையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 
      அவ்வப்போது பூசாரி வந்து தன் குடும்பக் கதையைச் சொல்வார். எனக்கு நாலு பசங்க. இங்கே இருக்கிறவன் தான் கடைசி. பெரியவன் டிரைவிங் கத்துக்கிட்டான். இப்போ துபாயிலே இருக்கான். ரெண்டாவது பையன் ஃபிட்டர் தொழில் கத்துகிட்டு கும்மாணத்திலே வேலை  பாக்கிறான். மூணாவது பய அங்கேயே இஞ்சினீரிங் காலேஜிலே படிக்கிறான். பெரியவன் அனுப்பற பணத்திலே தாங்க அவன் படிப்பு நடக்குது. இப்ப பெரியவனுக்குக் கல்யாணம் ஆயிடிச்சின்னா அவன் தம்பிக்குப் பணம் அனுப்பறது நின்னு போயிடும். ஒரு நல்ல எடம் வந்திருக்கு. தம்பி படிப்புக்காக அவனுடைய கல்யாணத்தை ஒத்திப் போடறதும் சரியில்லே. பார்ப்போம். ஐயனாரு ஏதாவது வழி காட்டுவாரு.
      பூசாரி மட்டுமல்ல, அந்த ஊர் ஆண்கள் ஒவ்வொருவரும் இவனிடம் வந்து தங்கள் சொந்தக் கதை முழுவதையும் சொல்லிக் கொண்டார்கள். இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறார்கள், கேட்டு எனக்கு என்ன உபயோகம் என்று நினைத்தாலும் வேறு வழி இல்லாமல் கேட்டுக் கொண்டான்.
      அதே போல, இவனைப் பற்றியும் ஒவ்வொருவரும் குடைந்து குடைந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அடுத்தவருடைய சொந்த விஷயங்களில் தலையிடுவது தவறு என்ற நாகரிகம் தெரியாத காட்டு வாசிகள் என்று நினைத்தான். முதலில் தன்னைப் பற்றி அரை குறைத் தகவல்களை மட்டுமே வெளியிட்டவன் பின்னர் மனம் மாறி இவர்கள் தங்களைப் பற்றி முழுமையாகச் சொல்லிக் கொள்வது போல என்னிடமும் எதிர்பார்க்கிறார்கள். சொல்வதில் என்ன தவறு என்று நினைத்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டான், தனது தொழிற்சாலை தள்ளாட்டத்தில் இருப்பது உள்பட.
      ஒருநாள் பூசாரியின் பையன், வித்தை காட்டறேன் பாருங்கடா என்று அக்கம் பக்கத்துப் பையன்களைக் கூட்டி வந்தான். ஒரு நூலில் ஒரு சிறு கல்லைக் கட்டி நூலின் மறு முனையை ஒரு குச்சியில் தொங்க விட்டான். மற்ற பையன்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து அந்த நூலில் வைத்தான். நூல் எரிந்தது. அதில் கட்டப்பட்டிருந்த கல் கீழே விழுந்தது. இது தான் வித்தையாக்கும் என்று பையன்கள் கேலி செய்தார்கள். இருங்கடா, இன்னும் இருக்குடா என்று சொல்லி விட்டு வேறு ஒரு நூலை எடுத்தான். அதில் ஏதோ பச்சிலைச் சாற்றைத் தடவினான். சற்று நேரம் காய வைத்து விட்டு முன்பு போல் அதில் கல்லைக் கட்டித் தொங்க விட்டான். இப்பொழுது அதைப் பற்ற வைத்தான். நூல் எரிந்தது. கரியாயிற்று. ஆனால் கல் விழவில்லை. மற்றப் பையன்கள் வாயைப் பிளந்தார்கள்.
                எப்படிடா? டேய் எனக்குச் சொல்லிக் குடுடா.
                மூணு நாள் பட்டினி கிடக்கிறியா, அப்ப தான் சொல்லித் தருவேன்.”
      இதைப் பார்த்துக் கொண்டிருந்த போது சுந்தரேசனுக்கு மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் தோன்றியது. மூலப் பொருள் தரக் குறைவைச் சரி செய்ய ஒரு வழி புலப்பட்டு விட்டது. ஒரு வருஷமாக மூளையைக் கசக்கிக் கொண்டபோது கிடைக்காத திட்டம் ஒரு வாரமாக அதைப் பற்றிச் சிந்திக்காத போது தோன்றியது.
      தம்பி, இங்கே வா, எனக்கு அந்த வித்தையைச் சொல்லிக் குடு, நான் மூணு நாள் பட்டினி கிடக்கிறேன் என்றான்.
      உங்களுக்குச் சொல்லித் தரேண்ணே. நீங்க பட்டினி எல்லாம் கிடக்க வேண்டாம். வேறே ஒண்ணும் இல்லீங்க. முருங்கை இலைச் சாறு அது
      அடுத்த புதன் கிழமை வந்தது. தென்னமரக்குடிக்கு அழைத்துப் போனார் பூசாரி. வைத்தியர் கட்டைப் பிரித்தார். கையில் ஒவ்வொரு இடமாக அழுத்திப் பார்த்துக் கொண்டே வந்தார். குறிப்பிட்ட ஓரிடத்தில் கட்டை விரலால் பலமாக அழுத்தினார். வலி தாங்காமல் ஆ என்று அலறினான் அவன். அடுத்த கணம் வலி மாயமாக மறைந்தது. எட்டு நாட்களாக கையில் இருந்த கனம் குறைந்தது. கை என்று ஒன்று இருப்பதான உணர்வே இல்லை. வைத்தியர் முட்டையையும் உளுத்தம் மாவையும் குழைத்துக் கை முழுவதும் பற்றுப் போட்டார். ஒரு வெள்ளைத் துணியை வைத்துக் கட்டினார்.
      நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு கட்டை அவுத்துட்டு வெந்நீரை விட்டுக் கழுவி துன்னூத்தைப் பூசுங்க. ஒரு வாரத்துக்கு எண்ணெயைத் தடவிங்க. நீங்க உங்க ஊருக்குப் போகலாம்.
      வெளியில் வந்ததும் பூசாரி சொன்னார், ஒரு வாரம் எண்ணை போட்டதிலே எலும்பு தசை எல்லாம் இளகி ரப்பர் கணக்கா ஆயிருச்சு. இப்போ அது தன் இடத்திலே சரியா ஒக்காந்துகிச்சு. டாக்டர் கிட்ட போனீ்ங்கன்னா, அன்னிக்கே சேத்து வைச்சுக் கட்டுப் போடுவாங்க. தசை விறைப்பா இருக்கறப்போ எலும்பைப் பொருத்தினா அது முசிறிக்கிட்டுத் தான் இருக்கும். அதிலே ஒரு சின்னப் பிசிறு இருந்தாலும் கை கோணிப் போயிடும். இப்படி இளக்கிக் கட்டறது தான் இயற்கையான நிலைக்குக் கொண்டாரும் என்றார்.    
      இதுவே மும்பையிலே இருந்தா எக்ஸ்ரே, ஆப்பரேஷன், ஸ்டீல் பிளேட் வைக்கறதுன்னு அம்பதாயிரம் ரூபாய் செலவு வெச்சுடுவாங்க. நீங்க வெறும் அம்பது ரூபாயிலே முடிச்சுக் குடுத்துட்டீங்க. ரொம்ப நன்றிங்க. இன்னிக்கு சாயங்காலம் பஸ்ஸிலே சென்னைக்குப் போறேன் என்றான்.
      எங்களை எல்லாம் நெனப்பிலே வெச்சுங்க என்றார்.
      உங்களை மறக்க முடியுமா? உங்க பையனையும் மறக்க முடியாது. இந்த ஒரு வாரம் ஓய்வு எடுத்ததிலே எனக்கு ஒரு புது வழி புலப்பட்டிருக்கு. ஐயனார் அருளாலே, அது வெற்றிகரமா முடிஞ்சுதுன்னா, என் தொழில் நிமிர்ந்துடும். அப்புறம் உங்க பையனோட காலேஜ் படிப்பை நான் பார்த்துக்குவேன் என்றான்.
      எல்லாம் நல்லபடியா நடக்கும் ஐயனாரு கை விடமாட்டாரு. போய்ட்டு வாங்க.
      மூன்று மாதம் கழித்து பூசாரிக்குப் போன் வந்தது. தொழில் நல்லா நடக்குது. உங்க மூணாவது பையன் ஃபோன் நம்பரைக் குடுங்க. அவன் காலேஜ் ஃபீஸ் எவ்வளவு, யார் பேருக்குப் பணம் அனுப்பணும்கிற தகவலை வாங்கிக்கிறேன், அத்தோட உங்க சின்னப் பையனுக்கும் என் நன்றியைச் சொல்லுங்க என்றான் சுந்தரேசன்.
      நன்றி ஐயனாருக்குத் தாங்க சொல்லணும். வருசா வருசம் வந்துட்டுப் போங்க என்றார் பூசாரி.

Tuesday, September 10, 2013

மரமேறி



     இரவு பத்து மணி இருக்கும் அப்பொழுது தான் உறங்க ஆரம்பித்திருந்தேன். கீய்ங், கீய்ங் என்று நாய்க் குட்டிகள் கத்தும் சத்தம் கேட்டுக் கண் விழித்தேன். மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன். 

      என் வீட்டிற்கு அடுத்தாற்போல் ஒரு மனை பல வருடங்களாகக் காலியாக உள்ளது. அதற்கு நான்கு புறமும் காம்பவுண்டுச் சுவர் உண்டு. அதில் இரண்டு சுவர்கள் சந்திக்கும் மூலையிலிருந்து தான் சத்தம் வந்தது. நாய் ஒன்று குட்டி போட்டிருக்கிறது போலும். லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. என் வீட்டுக் காம்பவுண்டு ஓரமாக நின்று பார்த்ததில் நான்கு குட்டிகள் கொழு மொழுவென்று பஞ்சுப் பந்துகள் போல அழகாக இருந்தன. பிறந்து பத்து நாள் இருக்கும்.

      நான் தற்போது சென்னை வாசி. இவ்வூருக்கு வந்து இரண்டு நாட்களாகிறது. இரண்டு நாட்களாகச் சத்தம் வரவில்லை.  இப்பொழுது ஏன் கத்துகின்றன? ஒருக்கால் மழையில் நனைவதனாலோ?

      சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு மனது தவித்தது. இந்தப் பிஞ்சு உயிர்களின் துன்பத்தைப் போக்க நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா?” என்று சிந்தித்துப் பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை. கீழ் வீட்டில் குடியிருப்பவரை எழுப்பி என் சோகத்தைப் பகிர்ந்து கொண்டேன். அவர் ஒரு பாலிதீன் விரிப்பை எடுத்து வந்து இரு சுவர்களையும் மூடும் வகையில் பந்தல் போல் விரித்து விட்டு அது காற்றில் பறக்காமல் இருக்க அதன் மேல் நான்கு கற்களையும் வைத்துவிட்டுத் தன் கடமை முடிந்ததாக நினைத்துத் தூங்கப் போய்விட்டார்.

      அப்படியும் குட்டிகள் கத்திக் கொண்டு தான் இருந்தன. எனக்குத் தூக்கம் வரவில்லை. வாசல் சன் ஷேடின் கீழ் நின்று அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். மழை சோவென்று பலத்த சத்தத்துடன் பெய்யத் தொடங்கியது. அதையும் மீறி குட்டிகளின் அவலக் குரல் கேட்டது. பாவம், குளிர் தாங்கவில்லை போலும். இவற்றை எடுத்து வந்து மேலே என் வீட்டு வரவேற்பு அறையில் ஒரு சாக்கை விரித்துப் படுக்க வைக்கலாமா என்று எண்ணினேன்.
      
       அடுத்த வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் ஏறிக் குதித்து அவற்றை எடுத்து வருவது ஒன்றும் பெரிய வேலை இல்லை தான். ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் பல உண்டு. முதலில், என்னிடம் டார்ச் லைட் இல்லை. இரவில் யாரை எழுப்பி டார்ச் லைட் இரவல் கேட்பது? செல் போன் வெளிச்சத்தை வைத்துக் கொண்டு ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் அடுத்த மனையில் பாம்புகள் நடமாட்டம் அதிகம். என் வீட்டிற்கும் அவை வருவதுண்டு. நாங்கள் அடிப்பதில்லை. நான் இந்த வீட்டைக் கட்டி இதில் முப்பது வருடம் வாழ்ந்திருக்கிறேன். யாரையும் பாம்பு கடித்தது இல்லை. கையைத் தட்டினால் ஓடி மறைந்து விடும். எங்களுக்கும் பாம்புகளுக்கும் அப்படி ஒரு எழுதப்படாத உடன்படிக்கை. ஆனால் இந்த அரைகுறை வெளிச்சத்தில் தெரியாமல் நான் பாம்பின் மேல் காலை வைத்துவிட்டால் அது அந்த ஒப்பந்தத்தை மதித்து நடக்குமா என்பது சந்தேகமே. 
     
      மேலும், குட்டிகளை எடுக்க முயன்றால் தாய் நாய் என்னை ஏதோ விரோதியாகக் கருதி கடித்து விடவும் கூடும். ஒரு புறாவுக்காகத் தன் உயிரைக் கொடுக்க முன்வந்த சிபி போல நாய்க்குட்டிகளுக்காக என் உயிரைக் கொடுத்து வரலாற்றில் இடம் பெற விருப்பமில்லை. ஆனாலும் இந்தச் சின்னஞ் சிறு பிராணிகளின் துன்பத்தைப் போக்க வழி தெரியாமல் இருக்கும் என் பலவீனத்தை நினைக்கும் போது வெட்கமாக இருந்தது. 
      
     குட்டிகள் மழைச் சத்தத்தோடு போட்டி போட்டுக் கத்திக் கொண்டிருந்தன. எனக்குத் தூக்கம் வரும் என்ற நம்பிக்கை இல்லை. அங்கேயே திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன். இதற்கிடையில் பாலிதீன் விரிப்பில் தண்ணீர் நிரம்பி குளம் போல் நடுவில் குழிந்து விட்டது. அதன் எடை தாங்காமல் மேலே வைத்திருந்த கற்கள் விழுந்து விடவே அத்தனை தண்ணீரும் குட்டிகள் மேல் தடதடவென்று கொட்டி மூழ்கடித்தது. அதனால் கத்தல் இன்னும் அதிகமாயிற்று.
   
     ஆண்டவனே, எனக்கு இவ்வளவு பெரிய உடலையும் அறிவையும் இத்தனை வசதிகளையும் கொடுத்திருக்கிறாய். இந்த  அற்ப ஜீவன்களுக்கு உதவ முடியாமல் இவற்றால் என்ன பயன்? அக்கம் பக்கத்தில் இத்தனை பேர் இந்தச் சத்தத்தை லட்சியம் செய்யாமல் தூங்கவில்லையா? எனக்கு மட்டும் ஏன் இப்படி மனம் சங்கடப்படுகிறது? முல்லைக்குத் தன் தேரையே பந்தலாக்கிய பாரியைப் பற்றியும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் பற்றியும் படித்ததை மற்றவர்களைப் போல மறந்துவிடாமல் நினைவில் வைத்திருப்பதாலா? செயல்படுத்தப்பட முடியாத நெஞ்சின் ஈரம் இருந்தும் ஒன்று தான், இல்லாததும் ஒன்று தான். திண்ணையில் சாய்ந்து யோசனை செய்து கொண்டே எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கி விட்டேன்.

      வழக்கமாகத் தேங்காய் பறிப்பவர் காலையில் வந்தார். அவருடன் எனக்கு முப்பது வருடப் பழக்கம். வாங்க ஐயா, எப்போ வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டுக் கொண்டே படியேறினார். அவருக்குப் பதில் முகமன் கூறிவிட்டு அவருடன் கொல்லைப் புறத்துக்குச் சென்றேன். பட்டண வாசியாப் போயிட்டீங்க, இருந்தாலும் ஊரை மறக்காம வந்திட்டுப் போயிட்டு இருக்கீங்களே. அதாங்க நல்லது. ஆனா, என்ன சொல்லுங்க, நம்ம ஊருக்கு ஈடு இந்த ஒலகம் பூராத் தேடினாலும் கெடைக்காதுங்க, என்ன சொல்றீங்க?” என்றார்.

      ஆமாம் என்று ஒப்புக் கொண்டேன். மரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு காலில் நார் வளையத்தை மாட்டிக் கொண்டு விறுவென்று மரம் ஏற ஆரம்பித்தார்.

                “அந்த மூலையிலே நாய் குட்டி போட்டிருக்கு. அந்தப் பக்கம் காய் விழாமல் பாத்துங்கண்ணே.”

              “சரிங்க.”
      
    அவருக்கு வயது எண்பது இருக்கும். அவரை மரம் ஏறச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கும் அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. அவருக்கும் பிழைக்க வேறு வழி இல்லை. இரண்டு பிள்ளைகள் துபாயில் இருக்கிறார்கள். பணம் காசு அனுப்புவதில்லை. ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். நீங்கள் மரம் ஏறுவதை விட்டு விட்டு ஏதேனும் சின்னதாக வியாபாரம் செய்யலாமே, நான் வேண்டுமானால் பணம் தருகிறேன் என்றேன். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நீங்க கவலைப் படாதீங்க ஐயா. என்னை முருகன் காப்பாத்துவான் என்று உறுதியாகக் கூறுவார். அவர் மரம் ஏறி இறங்கி வரும் வரையில் என் வாய், காக்க காக்க, கனக வேல் காக்க என்று புலம்பிக் கொண்டிருக்கும்.

      தேங்காய்களைப் பறித்துப் போட்டு, இறங்கி வந்து, எல்லாவற்றையும் குவித்து விட்டு என்னிடம் காசு பெற்றுக் கொள்ளும் நேரத்தில் என்னைப் பார்த்தவர், ஏன் ஐயா, மொகம் ஒரு மாதிரி இருக்கு? ஒடம்பு நல்லா இல்லையா?” என்றார்.

      நான் முதல் நாள் இரவுக் கதையைச் சொன்னேன். அவர் அதைக் கேட்டு விட்டு, இதுக்குப் போயா இவ்வளவு அலட்டிக்கிட்டீங்க? நாய்க் குட்டிங்க அப்படித் தான் கத்தும். கத்தக் கத்தத் தான் அதுக்கு பலம். மனிசக் கொழந்தைகளுக்கும் அப்படித் தான். என்றார்.

      ஆனா ரெண்டு நாளா இப்படிக் கத்தல்லியே. மழையிலே நனைஞ்சதனாலே தானே கத்துது. இப்படி ரொம்ப நேரம் நனைஞ்சா செத்துடாதா?”

      பூனைக்கும் ஆட்டுக்கும் தாங்க மழை ஆவாது. மத்த எந்தப் பிராணிக்கும் ஒண்ணும் செய்யாதுங்க. முருகன் ரெயின் கோட்டு போட்டுத் தான் பூமிக்கு அனுப்பறான். மனுசனுக்கும் அப்படித் தாங்க. ஒங்களைப் போல ஆப்பீசிலே ஒக்காந்து வேலை செய்யறவங்க தான் மழைலே நனைஞ்சா சளி புடிக்கும்பீங்க. எங்களைப் போல வய வெளிலே கெடக்கிறவங்க கொடையைப் புடிச்சிக்கிட்டா வேலை செய்ய முடியும்? நனைவோம், காய்வோம். ஒண்ணும் ஆகாதுங்க.

      உண்மை தான் அவரைப் பார்த்தாலே தெரிகிறது. அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி என்று பாரதியார் சொன்னபடியான வைரம் பாய்ந்த உடல் அது.
      மழை அதுக்குப் பாதிக்காதுன்னா பின்னே ஏன் அது கத்துது?”
      நாப்பது வயசிலே நாய்க் கொணம்னு சொல்றாங்கள்ல, அது என்ன கொணம்னு தெரியுமா ஐயா ஒங்களுக்கு?”
      நன்றியோட இருக்கறது.
      அது ஒசந்த கொணமில்லே. ஆனா நாய்க் கொணம்னு கேவலமால்ல சொல்றாங்க.
      அது என்ன கேவலமான நாய்க்குணம்? யோசித்துப் பார்த்தேன். புலப்படவில்லை.
      சொல்லுங்க.
      நம்ம வீட்டுக்கு யாராவது புதுசா வந்தா நாய் குலைக்குது. அவங்களே அடிக்கடி வந்தா அது குலைக்கிறதை நிறுத்திக்குது இல்லையா?”
      ஆமாம்.”

      நாய்க்குப் புதுசா எதுவானாலும் புடிக்காது. அது தான் அதோட பொறவிக் கொணம். குட்டிங்க பொறந்து நாலஞ்சு நாளைக்கு கண் மூடியிருக்கும். கண்ணெத் தொறந்து பாத்தா ஒரே வெளிச்சமா இருக்கா, அந்த வெளிச்சம் அதுக்குப் புடிக்காது. கத்தும். அப்புறம் அது பழகிப் போயிடும். ராத்திரிலே இருட்டைக் கண்டா புதுசா இருக்கா, கத்தும். அப்புறம் அதுவும் பழகிப் போயிடும். இப்போ மழை பெய்யிறது இதுகளுக்குப் புதுசு. புடிக்கல்லே. கத்துது. அது பழகற வரைக்கும் கத்திக் கிட்டு தான் இருக்கும்.        

      அப்படியா? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஈவு இரக்கம் இல்லாமல் தூங்குகிறார்கள், நான் மட்டும் தான் ஏதோ புத்தர், ஏசு, காந்தியின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேனே. அவர்கள் எல்லோரும் விஷயம் தெரிந்தவர்கள்.

      முழுக்கக் கேளுங்க ஐயா. மனுசப் பயலுக்கு நாப்பது வயசாச்சின்னா இந்த நாய்க் கொணம் வந்திடும். புதுசா எது வந்தாலும் புடிக்காது. புது ஊரிலே குடியேற மாட்டான். அப்படிப் போனாலும் எங்க ஊரு மாதிரி ஆகுமான்னு சொல்லிக்கிட்டு இருப்பான். புதுசா தொழில் ஆரம்பிக்க மாட்டான். கஷ்டமோ நஷ்டமோ பழைய வேலயையே தான் செய்வான்.

      சின்னப் புள்ளைங்களைப் பாருங்க. எப்போப் பாத்தாலும் புதுப் புது விஷயங்களைத் தேடிப் போயிட்டு இருப்பாங்க. பொறந்த கொழந்தை தெனம் ஒரு புது வெளையாட்டு வெளையாடுது. புதுசு புதுசா வார்த்தை கத்துக்குது. புதுப் புது சினேகிதம் ஏற்படுத்திக்கிட்டு பழகுது. அது தான் எப்பவும் சந்தோஷமா இருக்குது.

      உண்மை தான். புது மனிதர்கள், புது விஷயங்கள் என்றால் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு தானே அணுகுகிறோம்.

      எங்க முருகனைத் தகப்பன் சாமிம்பாங்க. அப்பனுக்கே உபதேசம் பண்ணினவனுங்க. அதுக்கு என்ன அர்த்தம்? புதுப் புது விஷயங்களைப் பாத்து பயப்படாம அதை அதை அப்படி அப்படியே ஏத்துக்கணும்னு அதை மறந்து போன பெரியவங்களுக்குச் சின்னப் புள்ளைங்க தான் சொல்லித் தர  முடியும். 

      முற்றிலும் உண்மை. பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவது எனக்கு நினைவுக்கு வந்தது. ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.


      முருகன் சிவனுக்கு ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்த கதையில் இவ்வளவு பெரிய சூட்சுமம் இருக்கிறதா? எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டார் படிப்பறிவில்லாத இந்த மரமேறி!