Pages

Saturday, February 12, 2011

வாயுதேவன் புலம்பல்

வெப்பம் மிகுந்த இடம் நோக்கி
விரைந்து செல்லும் இயல்புடனும்
சூடு என் மேல் பட்டவுடன்
சுர்ரென மேலெழும் இயல்புடனும்
இறைவா என்னைப் படைத்துவிட்டாய்
இவ்விதி மாற்றல் எளிதாமோ

வீடுகள் தோறும் கூரையினில்
விதவிதப் பெயருடன் தொங்கிடுவார்
முக்கரம் விரத்துச் சுழன்றிடும் இச்
சக்கரத்தாழ்வார் செயல் காணீர்

தலைவா உன்னை மறந்துவிட்டு
தானே விதியெனத் தருக்குகிறார்
மக்கள் உடலைக் குளிர்வித்து
மற்றவர் வெப்பம் நான் பெற்று
மேலே செல்ல முயலுகையில்
மிகுந்த எதிர்ப்புக் காட்டுகிறார்
கழுத்தைப் பற்றித் திருகுகிறார்
தரையில் தள்ளி மோதுகிறார்
குனிய வைத்துக் குட்டுகிறார்
கொடுமை அந்தோ நான் சகியேன்
இறைவா உன்னை வேண்டுகிறேன்
இனிப் படமுடியாது இத்துயரம்
சக்கரத்தாழ்வார் செயும் கொடுமை
சற்றே மாற்ற மாட்டீரோ

No comments:

Post a Comment