Pages

Saturday, February 12, 2011

வேதனைக்கு நன்றி

செலுத்துகிறேன் நன்றி சேர்ந்திட்ட வேதனைக்கு
இதயத்தைக் கனமாக்கி எனைக் கவிஞன் ஆக்கியதால்.
உலகெல்லாம் பெருவெள்ளம், ஊரெங்கும் பால் வெள்ளம்
எந்தன் குடிசையிலே இருப்பதுவோ சிறு கலயம்
அதனில் இருப்பதுவோ அழுக்கடைந்த நீராகும்
தாகமும் தீர்ப்பதில்லை, தாபமும் தணிப்பதில்லை.
பொங்கு வரும் பாலாற்றில் மொண்டுவந்து ஒருகுவளை
விடாய் தீர்த்துக் கொள்ள விதி எனக்குப் பணிக்கவில்லை
அடுத்தவரைப் பார்த்து அழுக்காறு கொள்கின்றேன்
அவலாசைப் படுகின்றேன், ஆற்றாமை உணர்கின்றேன்.
விதியென்னும் தத்துவத்தை மனிதர்க்குரைத்தவனை
வியந்து பாராட்டி விடுகின்றேன் பெருமூச்சை

நரகத்தைத் தேடி நான் எங்கும் செல்லவில்லை
எனைத் தேடி வந்தஃது இயற்றியது ஓர்அரங்கை.
அரங்கின் பொருள் யாவும் ஆக்கியவன் யானே
என் செயலின் விளைவான இழிவான நரகிற்கு
விதியையோ நோவேன், வீழ்ந்து விட்ட மதியையோ நோவேன்

ஊரெங்கும் கொண்டாட்டம் உல்லாசம் களியாட்டம்
ஆற்றிடை நந்தி போல் அசையாமல் நிற்கின்றேன்
தனைமறந்து எல்லோரும் தமருடனே களிக்கையிலே
எனை மறக்க இயலாமல் எனக்குள்ளே குமைகின்றேன்

யான் என்பவன் எனக்கோர் பெரும்புதிர்
தன்னைப் புரிந்து கொள்ளத் தான் அனுமதிப்பதில்லை.
ஊரோடும் உறவில்லை, உறவோடும் ஒட்டில்லை.
வேலையிலும் ஓய்வினிலும் விளையாட்டு வேளையிலும்
தன்னைப் பற்றியே தான் மூழ்கி இருத்தலால்.
காணும் பொருள் யாவும் காட்டுவது என் குறையை
இந்த முட்செடி என்னால் தோன்றியது
அந்தப் பெரும்பள்ளம் ஆக்கியவன் நானே
இறைந்திருக்கும கற்களெல்லாம் இறைத்ததும் யானே
என் வாழ்வு என் துன்பம் யான் அடையத் துணிந்தேன்
எனை நாடி வந்தோர்க்கும் ஏனளித்தேன் துயரம்
அன்பால் எனை அணைத்து ஆறுதலாய் ஒரு வார்த்தை
நீயுரைப்பாய் என்று நிலையாக உனை நம்பி
அடைக்கலம் புகுந்த எனை ஆதரிப்பாயே.
கருணைக் கடலன்றோ, கவினுறு மலையன்றோ
சொல்லாமற் சொலவல்ல சூக்குமப் பரம்பொருளே
கேட்காமற் கொடுக்கின்ற கேடிலா வள்ளல் நீ.
உன்னை அடைந்தோர்க்கு உண்டோ ஒரு துன்பம்.

No comments:

Post a Comment