Pages

Sunday, February 6, 2011

அவன் வாழ்ந்தது கனவா, மாண்டது கனவா

இவர்கள் ஏன் அழுகின்றனர்?
நானும் தான் விம்முகிறேன்
எதற்காக?
என் மகன் இறந்துவிட்டானா
இல்லை, இருக்க முடியாது.
அவனுக்கென்ன நோயா, நொடியா?
கிழமா, கட்டையா?
இது யாரோ பரப்பிய பொய்.

அவனைப் பற்றிய செய்தி வந்ததும்
கனலிடை அவனுடல் மடுத்ததுவும்
கடலினில் அஸ்தி கரைத்ததுவும்
எல்லாமே கனவுத் தோற்றங்கள்.

அய்லநாடு சென்றுளான் என் மகன்
அடுத்த வாரம் வருவான்
அவனிடம் இக்கனவைச்சொல்வேன்
கைதட்டிச் சிரிப்பான்
கண்டு நான் மகிழ்வேன்

***************************

ஒரு சுகமான நீண்ட கனவு.
ஓடிய ஆண்டு முப்பத்தைந்து

முருகனே எனக்கு மகனாய்ப் பிறந்ததும்
குழந்தையாய் வளர்ந்து குதூகலம் தந்ததும்
தாய் தந்தையரைத் தாங்கிடும் விழுதாய்
பொங்கும் இளமையில் பூரித்து நின்றதும்
மெச்சியே அவனை ஊரார் புகழ்கையில்
மேனி சிலிர்த்து நாங்கள் நின்றதும்

எல்லாமே கனவுகள்,
இன்று முடிந்தன.

கனவு கலைந்ததற்காக
வருந்துவார் உண்டோ?
பின் ஏன் இவர்கள் அழுகின்றனர்,
நானும் தான் விம்முகிறேன்?

அவன் வாழ்ந்தது கனவா, இல்லை மாண்டது கனவா?









சுமை

தாய் உனைச் சுமந்தாள் வயிற்றில்
முன்னூறு நாளில்
அதற்கு ஒரு மகிழ்ச்சியான முடிவு.
நீ பிறந்தாய். 

நாங்கள் உனைத் தோளில் சுமந்தோம்
அதற்கு ஒரு மகிழ்ச்சியான முடிவு
நீ நடக்கத் தொடங்கினாய்.

இன்று
முன்னூறு நாளாக்
நான் உனை நெஞ்சில் சுமக்கிறேன்.
இதற்கு எது முடிவு?

No comments:

Post a Comment