Pages

Saturday, August 7, 2010

வர்ணமுறை எப்படித் தோன்றியது?

ஒரு தாய்க்கு நான்கு மகன்கள். மூத்தவன் பக்திமான். அவனுக்குச் சம்பாதிப்பதில் ஈடுபாடு இல்லை. இரண்டாமவன் முரடன். எவனுக்கும் கட்டுப் படமாட்டான். எனவே அவனும் வேலைக்குச் செல்லவில்லை. குடும்பத்தைக் காப்பாற்றப் பணம் வேண்டுமே. மூன்றாமவனும் நான்காமவனும் கூட்டு வியாபாரம் செய்து பொருள் தேடத் தொடங்கினர். மூன்றாமவன் சற்று அதிக புத்திசாலி. குறைந்த உழைப்பில் அதிகமாகச் சம்பாதிக்கும் சாமர்த்தியம் அவனிடம் இருந்தது. கடைசிப் பையனோ சூது வாது அறியாதவனாகவும் உண்மையாக உழைப்பவனாகவும் இருந்தான். மூன்றாமவன் அவன் உழைப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவனுக்கு உரிய பங்கு தராமல் ஏய்த்து வந்தான்.

தாயின் காதில் இந்தச் செய்தி விழுந்தது. அவளால் பொறுக்க முடியவில்லை. அவள் அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்துவதற்காக இரண்டாவது பையனை அனுப்பி வைத்தாள். சிறிது காலம் கழித்து மூன்றாமவன் தன் அண்ணனைச் சரிக்கட்டி விட்டுத் தன் ஏமாற்றல்களை முன்பு போலச் செய்துவந்தான் என்ற செய்தி தாயின் காதில் விழுந்தது. அவள் தன் மூத்த மகனைக் கூப்பிட்டு, நீ அவர்கள் மூவரும் ஒருவர்க்கொருவர் நியாயமாகச் செயல்படுமாறு செய் என்று ஆணையிட்டாள்.

மூத்தவன் அவர்களிடம் இவ்வுலக வாழ்வுக்குப் பின்னரும் மற்றொரு வாழ்வு உண்டு என்றும் அப்பொழுது நன்றாக இருக்க வேண்டுமானால் தான தர்மங்கள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினான். உழைப்பாளிக்கு அதிக ஊதியம் கொடுக்க மனம் வராத செல்வந்தன் தர்மத்துக்கு மிகுதியாகச் செலவழிக்கத் தயங்கவில்லை. பக்திமான் அவனிடமிருந்து கொஞ்சம் பொருள் பெற்றுக் கொண்டான். அதில் தனக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு மீதியை நான்காமவனுக்குக் கொடுத்து வந்தான். சொத்தைக் கள்வர் கொள்ளை அடிக்காமல் பாதுகாத்து வருவதற்காக இரண்டாமவனுக்கும் கொஞ்சம் பொருள் கொடுக்கப்பட்டது. நால்வரும் கிட்டத்தட்ட சமநிலையில் மகிழ்ச்சியாக இருந்தனர்.

நாளடைவில் அவர்கள் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தினர். ஒவ்வொருவருக்கும் மூன்று மகன்கள் பிறந்தனர். இந்தப் பன்னிருவரில் சிலர் தத்தமது தந்தையின் தொழில்களைத் தொடர்ந்தனர். பெரும்பாலானோர், அவரவர் இயல்புக்கும் திறமைக்கும் ஏற்றபடி, தமது சிறிய தந்தை அல்லது பெரிய தந்தையின் வேலைகளைச் செய்யத் தொடங்கினர்.

இப்படித் தான் நம் நாட்டில் வர்ண முறை தொடங்கியது. உழைக்க மட்டுமே தெரிந்த அப்பாவிகள் உழைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நாலாம் வருணத்தவர் எனப்பட்டனர். அவர்களைப் பயன்படுத்திப் பொருள் குவித்தவர்கள் மூன்றாம் வருணத்தவர். அவ்வப்போது தெய்வம், பாவம், புண்ணியம் என்று நல்லுரைகளை உபதேசித்தும் தான் தானமாகப் பெற்றுக் கொண்டதை இல்லாதவர்க்குக் கொடுத்து உதவியும் எல்லோரும் எல்லாமும் பெற வழி செய்தவர் முதல் வருணத்தவர். இவர்கள் மூவரையும் கண்காணித்துத் தவறு செய்பவர்களைத் தண்டித்தும் கள்வர், பகைவர் வராமல் காத்தும் சமூக அமைதியை நிலை நாட்டியவர் இரண்டாம் வருணத்தவராயினர்.

இந்தத் தொழில்களை அவர்கள் பரம்பரையாக மேற்கொள்ளவில்லை. அவரவர் இயல்புக்கும் திறமைக்கும் ஏற்றபடியே அவை அமைந்தன. இதைத்தான் கீதையில் கண்ணன் கூறுகிறான், சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகசஹ - குணத்துக்கும் செயல் திறமைக்கும் ஏற்றபடி என்னால் நான்கு வர்ணங்கள் அமைக்கப்பட்டன.

காலப் போக்கில் இந்த வர்ண முறை சீர்கெட்டு சாதி முறையாக உருவெடுத்தது. பாரதி பிறப்பைச் சாராத முற்கூறிய வர்ண முறையை ஆதரிக்கும் அதே வேளையில் சாதி முறையை எதிர்த்தார்
என்பதை அவரது எழுத்துகள் காட்டுகின்றன.


கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரை சமுதாயம் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. சமுதாயம் முழுமைக்குமாக மழை, நோயின்மை, நீண்ட ஆயுள் முதலானவற்றைக் கோரித் தெய்வங்களை வேண்டுவதற்காக ஒரு கூட்டம் இருந்தது. அவர்கள் அந்தணர் எனப்பட்டனர். அவர்கள் தோத்திரங்கள் இசைத்தும், வேள்வி இயற்றியும் மனித சமுதாய நலனுக்காகவும், பிற உயிரினங்களின் நலனுக்காகவும் இறைவனை வேண்டினர். “மித்திரனும், வருணனும் எங்களுக்கு நல்லவர்களாக இருக்கட்டும், இரண்டு கால் பிராணிகளுக்கும் நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும், எங்களுடைய பசுக்களையும் குழந்தைகளையும் காப்பாற்று, எங்களுக்குச் செல்வம் கொடு, எங்களுக்கு மழை பொழிவி” என்று சமுதாய நலனை வேண்டுபவையாக இருந்தன அவர்கள் பயன்படுத்திய வேத மந்திரங்கள். அதனால் தான் வள்ளுவர் அவர்களை எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவர்களாகக் குறிப்பிடுகிறார்.

அதே போல, சமூகம் முழுமைக்கும் வெளிப் படையெடுப்புகள் மற்றும் உள்நாட்டுக் கலகம் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் அரசக் கூட்டத்தவர் இருந்தனர். வைசியர்கள் எனப்படுவோர் விவசாயம், வாணிகம், கைத்தொழில் இவற்றில் ஈடுபட்டுச் சமுதாயம் முழுமைக்குமான நுகர் பொருட்களை உற்பத்தி செய்துவந்தனர். நான்காம் வருணத்தவர் சமுதாயம் முழுமைக்குமான குற்றேவற் பணிகளைச் செய்து வந்தனர்.

தொழிலைத் தேர்ந்தெடுக்கச் சுதந்திரம்

அதற்கு முந்திய காலங்களில் எந்தத் தொழிலில் யாருக்கு நாட்டம் உள்ளதோ அவர் அந்தத் தொழிலைச் செய்யலாம் என்று இருந்தது. வர்ணம் தொழிலால் தீர்மானிக்கப்பட்டதே அன்றிப் பிறப்பால் நிர்ணயிக்கப் படவில்லை. ஆனால் நாம் பார்க்கும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்த முறை கைவிடப்பட்டுப் பரம்பரை முறை வழக்கத்திற்கு வந்து விட்டிருந்தது. இதனால் சிலர் பரம்பரைத் தொழிலுக்குத் தகுதி இல்லாவிடினும், அதில் நாட்டம் இல்லாவிடினும் அவ்வத் தொழில்களில் திணிக்கப்பட்டிருப்பர் என ஊகிக்கலாம். இதனால் மற்றத் தொழில்களில் அதிகம் பாதிப்பு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் அந்தணத் தொழிலை ஆன்மிக நாட்டமும், சுயநலமின்மையும் இல்லாதார் செய்ய நேரிடின் ஏற்பட்டிருக்கக் கூடிய இழப்பு அதிகமாகவே இருந்திருக்கும்.

பொருள் நாட்டம் உடையார் வைசியத் தொழிலுக்கே பொருத்தமானவர். அத்தகையோர் அந்தணர் குலத்தில் பிறந்து விட்ட காரணத்தால் அந்தணத் தொழிலைச் செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப் படும்போது வேள்வி முதலானவற்றைப் பொருளீட்டும் வழியாகக் கொள்ளத் தொடங்குவர். ஒவ்வொரு ஊரிலும் இத்தகையோரின் எண்ணிக்கை, குறிப்பிடக் கூடிய அளவுக்குப் பெருகின் மக்களுக்கு அவர்கள் செய்யும் வேள்விகளிலும், அதற்கு ஆதாரமான வேதங்களிலும் நம்பிக்கை குறைவது இயல்பே.

No comments:

Post a Comment