Pages

Thursday, September 15, 2011

புதிய ஆலயம்

(இந்த என் படைப்பு வல்லமை மின் இதழில் பிரசுரம் ஆகியுள்ளது.)

 சுற்றிலும் பார்க்கிறோம் சோகச் செய்திகள்
சாதியின் பெயரால் மதமெனும் சாக்கால்
உடமை சேர்க்க உரிமை நாட்ட
அடிதடி கொலைகள் ஆயிரம் நிதமும்
அமைதி வேண்டி ஆலயம் சென்றால்
அங்கும் ஆண்டவன் கையில் ஆயுதம்
ராமன் பாணம் கண்ணன் சக்கரம்
கணபதி அங்குசம் காளியின் போர்வாள்
 மாறுபட்டார் மனத்தினை மாற்ற
கொலை வழி அன்றிப் பிறவழி அறியா
முதிரா மனத்தினர் வகுத்தவை இவையாம்
 சமய முறையிலும் சாத்திரங்களிலும்
புதியன புகுதல் வழுவல அதனால்
புத்தர் காந்தி புனிதர் வள்ளல்
போதனை செய்த புண்ணிய வழியை
நெஞ்சில் நிறுத்தும் தெய்வங் களுக்கு
புதிய ஆலயம் புனைவோம் வாரீர்
 ஆலமர்ந் திருந்து அறமொழி அருளும்
மோன குருவை மூலவர் ஆக்குவோம்
ஆடல் புரிந்து அணுதொறும் இயக்கும்
தாண்டவன் கோயில் தனியே அமைப்போம்
செல்வம் அருளும் சீரார் திருமகள்
அறிவினை அருளும் கலைமக ளுக்கும்
ஆலயம் பலவாய் ஆங்காங் கமைப்போம்
வள்ள லாரை வணங்கிடும் மன்றம்
போதி மரத்தடி முனிவன் சைத்தியம்
வீதிகள் தோறும் விளங்க வைப்போம்
அமைதி வழியில் அகிலம் வெல்லும்
ஆற்றல் பெற்றிட அவரை வணங்குவோம்

No comments:

Post a Comment