Pages

Tuesday, August 16, 2011

ஔவையார் பாடல்கள்

இட்டமுடன் என்றலையி லின்னபடி யென்றெழுதி
விட்டசிவனும் செத்துவிட்டானோ முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவனுக் கன்னாய்
நெஞ்சமே அஞ்சாதிரு

தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழமண்டலமே பெண்ணாவள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு.

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா

வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமை சொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர் முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே- நாணாமல்
பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக் கீச்சென்னும் கிளி

சுரதந்தனி லிளைத்த தோகை சுகிர்த
விரதந்தனி லிளைத்த மேனி நிரதம்
கொடுத் திளைத்த தாதா கொடுஞ்சுளிற் பட்ட
வடுத் தொளைத்த கல்லாபிராமம்

ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொருள் எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித் தாதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்திம் மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையா லெழுதானை யெஞ்ஞான்றும் பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளென்
றெற்றோ மற்றெற்றோ மற்றெற்று

வானமுளதால் மழையுளதால் மண்ணுலகில்
தானமுளதால் தயையுளதால் ஆனபொழு
தெய்த்தோ மிளைத்தோ மென்றே மாந்திருப்போரை
எற்றோ மற்றெற்றோ மற்றெற்று

பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக் கொட்டும் சேரமான்
வாராயென வழைத்த வாய்மை யிம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்

விரகரிருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் அரையதனிற்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று

நம்பனடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தைக்காம் வம்புக்காம்
கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் காவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்

கருங்குளவி சூரைத்தூ றீச்சங்கனி போல்
விருந்தினர்க்கொன் றீயாதான் வாழ்க்கை அரும்பகலே
இச்சித்திருந்த பொருள் தாயத்தால் கொள்வரென்
றெற்றோ மற்றெற்றோ மற்றெற்று

எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உள்ளீரம் பற்றாக் கிடையே போல் பெண்ணாவாள்
மெற்றொடி மாதர் புணைர்முலை மேற் சார்வாரை
எற்றோ மற்றெற்றோ மற்றெற்று

ஒரு கொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்க்
கரியுரிவைக் கங்காளை காளாய் பரியுடனே
கண்ணால வோலை கடிதெழுத வாராயேல்
தண்ணாண்மை தீர்ப்பன் சபித்து

பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளே யாமாகில்
கூறாமல் சன்னியாசம் கொள்

திங்கட் குடையுடைச் சேரனும சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தலிலே
சங்கொக்கவோர் குருத்தீன்று பச்சோலை சலசலத்து
நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே

சண்டாளி சூர்ப்பனகை தாடகை போல் வடிவு
கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே தொண்டர்
செருப்படி தான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.

ஏசியிடலின் இடாமையே நன்றெதிரிற்
பேசு மனையாளிற் பேய் நன்று நேசமிலா
வங்கணத்தி னன்று பெரிய பகை வாழ்வில்லாச்
சங்கடத்திற் சாதலே நன்று

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணுமே பெருங்கானிற்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்ற
தீரிரவு துஞ்சாதென் கண்

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத் தொருவர் பூர்த்தமலர்த்
தண்டாமரைத் திருவே தாதா கோடிக் கொருவர்
உண்டாயின் உண்டென் றறு.

உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்க
தள்ளி வழக்கதனை தான் பேசி எள்ளளவும்
கைக்கூலி வாங்கும் காலறுவான்றன் கிளையும்
எச்சமறு மென்றா லறு



(மேலும் வளரும்)

No comments:

Post a Comment