Pages

Monday, July 18, 2011

ரிஷிகள்

ரிஷிகள் பற்றிய சில தவறான கருத்துகள் நம்மிடையே நிலவுகின்றன. சரியானதைத் தெரிந்து கொள்வோம்.

1 ரிஷிகளும் சன்னியாசிகளும் ஒன்று அல்ல. ரிஷிகள் அல்லது முனிவர் என்போர் வேறு. சந்நியாசிகள் அல்லது துறவிகள் என்போர் வேறு. ரிஷிகள் மனைவி மக்களுடன் வாழ்ந்தவர்கள். மாறாக, சன்னியாசி என்பவர் இல்லற வாழ்வைத் துறந்தவர். வேத காலத்தில் பிராமணர்களுக்கு மட்டுமே இந்தத் துறவறம் விதிக்கப்பட்டிருந்தது. பிரம்மசரியம் அல்லது கல்விப்பருவம், கிருஹஸ்தம் அல்லது இல்லறம், வானபிரஸ்தம் அல்லது காடுவாழ் பருவம் மூன்றையும் கடந்தபின் வருவது சன்னியாசம்.

ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்தனை செய்வோரே ரிஷி எனப்பட்டார். இது இறைவனைப் பற்றியதாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பிற விஷயங்களாகவும் இருக்கலாம். நாட்டிய சாத்திரம் வகுத்த பரதரும், காம சூத்ராவின் ஆசிரியரான வாத்ஸ்யாயனரும் ரிஷி என்றே கூறப்படுகின்றனர். கடவுள் மறுப்புக் கொள்கையான சார்வாகம் பேசிய ஜாபாலி என்ற முனிவர் பற்றி வால்மீகி ராமாயணம் பேசுகிறது. முனி என்ற சொல்லுக்கு மனனம் (சிந்தனை) செய்பவர் என்பது பொருள். ரிஷி என்ற சொல்லுக்கு மந்திரத்தை மனக்கண்ணால் கண்டவர் என்பது பொருள். மந்திரம் என்பது இறைவன் பற்றிய மெய்ஞானம் மட்டுமல்ல, மனத்தின் ஆழத்தில் புதைந்து இருந்து, தீவிர சிந்தனையின் விளைவாக வெளிப்படும் உண்மையையும் குறிக்கும். சுருக்கமாகக் கூறுவதானால், இன்று ஆராய்ச்சியாளர் அல்லது சிந்தனையாளர் எனப்படுவோரே முன்பு ரிஷி எனப்பட்டனர் என்பது தெரிகிறது.

2 ரிஷிகள் என்றால் காட்டில் தான் வாழ வேண்டுமென்பது இல்லை. நகரத்தில் வாழ்ந்த ரிஷிகள் பலர் உண்டு. உதாரணமாக, ஜனகர், விஸ்வாமித்திரர் போன்ற ராஜரிஷிகளைக் கூறலாம். வசிஷ்டர் போன்று அரசருடைய குருவாக இருந்தவர்களும் நகரங்களிலேயே வாழ்ந்தனர்.

3 ரிஷிகள் காவி ஆடை உடுத்துபவர்கள் அல்ல. சன்னியாசிகள் தாம் துவராடை பூண்பவர்கள். அதுவும் சமண சாக்கிய சமயங்கள் தோன்றிய பின்னர் ஏற்பட்ட வழக்கமே. இளமையிலேயே துறவு பூணுதல், எல்லா வகுப்பினரும் துறவு பூணல், மற்றும் தலையை மழித்துக் கொள்ளுதல் ஆகிய வழக்கங்களை ஏற்படுத்தியது அவையே. சங்கரர் பௌத்த சந்நியாசிகளைப் பின்பற்றித் தலையை முண்டனம் செய்துகொண்டு பூணூலையும் களைந்து இளமையிலேயே துறவு பூண்டார். அதனால் அவர் பிரச்சன்ன பௌத்தர் –மறைமுக பௌத்தர்- எனப்பட்டார். இன்றும் சங்கரரின் வழிவந்தவர்கள் மேற்படி முறையில் தான் கோலம் கொள்கின்றனர். மாறாக, வைணவ சன்னியாசிகள் பழைய வேத முறைப்படி இல்லறத்தைக் கடந்த பின்னரே துறவு பூணுகின்றனர். தலையை முண்டனம் செய்யாமலும், பூணூல் அணிந்தும் காணப்படுகின்றனர்.

4 தவம் என்பது ஆராய்ச்சியே. தவம் என்ற சொல் தபஸ் என்ற வடமொழி வேரிலிருந்து பிறந்தது. அதற்கு உடலையும் உள்ளத்தையும் வெம்மைப் படுத்திக் கொள்ளுதல் என்பது பொருள். இடைவிடாத சிந்தனை இவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதால் அது தவம் எனப்பட்டது. எனவே தவம் செய்யக் காட்டுக்குத் தான் போகவேண்டும் என்பது இல்லை.

5 எல்லா ரிஷிகளும் பிராமணர்கள் அல்லர். வேதப் பனுவல்களை இயற்றிய ரிஷிகளில் பலர் பிராமணர் அல்லாதவர்கள். பிறப்பின் காரணமாக ஒருவர் ரிஷி ஆவதில்லை. கடுமையான தவத்தின் மூலம் எவரும் ரிஷித் தன்மை அடைய முடியும் என்பதற்கு விசுவாமித்திரர் சான்று. விசுவாமித்திரர் தவிர வேறு பல அரசர்களும் வேத மந்திரங்களை இயற்றிய ரிஷிகளாகப் போற்றப்படுகின்றனர்- மந்தாத்ரி, ஷிபி, வசுமனான், பிரதர்த்தனன், மதுசந்தஸ், ரிஷபன், ரேணி, அம்பரீஷன், பரதன், மேதாநிதி, நாயகன், ரகுகணன், வக்ஷப்ரியன், புரூலன், வேனன், சுதாசன், கிருதசமதன், தேவாபி, சந்தானு.

வேதம் இயற்றிய ரிஷிகளில் பெண்டிரும் உண்டு - புலோமனை மகள் ஷசி, காமை மகள் சிரத்தை, சக்தி மகள் கோரவி, அப்பிரீணா மகள் வாக்கு, அகத்தியர் மனைவி லோபாமுத்ரை. (ஆதாரம் - தேவநேயப் பாவாணர் இயற்றிய தமிழர் மதம்)

வியாசர் பராசர முனிவருக்கும் மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர். ஜாபாலா என்ற பெண்ணுடைய மகன் சத்திய காமன் கல்வி கற்கப் போகும்போது தன் தந்தை பெயரை அறிய விரும்பினான். அப்பொழுது அவள், உன் தந்தை யார் என்று எனக்குத் தெரியவில்லை என்றாள். அந்த சத்திய காமன் சிறந்த ரிஷியாகப் பெயர் பெற்றார். அதனால் தான் ரிஷி மூலம் விசாரிக்கக் கூடாது என்ற பழமொழி பிறந்தது. ஒருவர் ரிஷி ஆகிவிட்டால் அவருடைய சந்ததியினருக்கு அதே துறையில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட மிகுதியாக இருந்ததால் அவர்களும் ரிஷி ஆயினர்.

No comments:

Post a Comment