Pages

Wednesday, November 3, 2010

குருவாய் வருவாய்

குருவாய் வந்தருள குகனை நான் வேண்டி நின்றேன்
குழந்தையாய் வந்தெனக்குக் கூறிட்டான் உண்மையினை

சென்றதைக் குறித்துக் குமையாதே, அது வேண்டாம்.
இன்றெது உன் கண் முன் உள்ளதோ அதைக் கவனி.
வருவது பற்றியொரு கவலை ஏன்? கற்பனை ஏன்?
இருப்பது இக்கணத்தில் இதனில் வாழ் என்றுரைத்தான்.

வாயால் உரைக்கவில்லை வார்த்தையிலாச் செய்தியது.
சேயாம் இவன் முகத்தில் தெரிந்திட்ட காட்சியது.

நேற்று வலித்ததை நினைவில் வைத்திருந்து
தேற்றுவார் தேடி தினமும் அழமாட்டான்.
பசி வரும் கணத்துக்கு முந்தியதோர் கணம் வரையில்
வசீகரப் புன்னகை மாறாமல் படுத்திருப்பான்.

சிறுவா உன் முன்னர் சிரம் தாழ்ந்து நிற்கிறேன்
ஒரு வார்த்தை உரையாமல் உபதேசம் தந்ததனால்.

No comments:

Post a Comment