Pages

Tuesday, September 10, 2013

மரமேறி



     இரவு பத்து மணி இருக்கும் அப்பொழுது தான் உறங்க ஆரம்பித்திருந்தேன். கீய்ங், கீய்ங் என்று நாய்க் குட்டிகள் கத்தும் சத்தம் கேட்டுக் கண் விழித்தேன். மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன். 

      என் வீட்டிற்கு அடுத்தாற்போல் ஒரு மனை பல வருடங்களாகக் காலியாக உள்ளது. அதற்கு நான்கு புறமும் காம்பவுண்டுச் சுவர் உண்டு. அதில் இரண்டு சுவர்கள் சந்திக்கும் மூலையிலிருந்து தான் சத்தம் வந்தது. நாய் ஒன்று குட்டி போட்டிருக்கிறது போலும். லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. என் வீட்டுக் காம்பவுண்டு ஓரமாக நின்று பார்த்ததில் நான்கு குட்டிகள் கொழு மொழுவென்று பஞ்சுப் பந்துகள் போல அழகாக இருந்தன. பிறந்து பத்து நாள் இருக்கும்.

      நான் தற்போது சென்னை வாசி. இவ்வூருக்கு வந்து இரண்டு நாட்களாகிறது. இரண்டு நாட்களாகச் சத்தம் வரவில்லை.  இப்பொழுது ஏன் கத்துகின்றன? ஒருக்கால் மழையில் நனைவதனாலோ?

      சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு மனது தவித்தது. இந்தப் பிஞ்சு உயிர்களின் துன்பத்தைப் போக்க நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா?” என்று சிந்தித்துப் பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை. கீழ் வீட்டில் குடியிருப்பவரை எழுப்பி என் சோகத்தைப் பகிர்ந்து கொண்டேன். அவர் ஒரு பாலிதீன் விரிப்பை எடுத்து வந்து இரு சுவர்களையும் மூடும் வகையில் பந்தல் போல் விரித்து விட்டு அது காற்றில் பறக்காமல் இருக்க அதன் மேல் நான்கு கற்களையும் வைத்துவிட்டுத் தன் கடமை முடிந்ததாக நினைத்துத் தூங்கப் போய்விட்டார்.

      அப்படியும் குட்டிகள் கத்திக் கொண்டு தான் இருந்தன. எனக்குத் தூக்கம் வரவில்லை. வாசல் சன் ஷேடின் கீழ் நின்று அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். மழை சோவென்று பலத்த சத்தத்துடன் பெய்யத் தொடங்கியது. அதையும் மீறி குட்டிகளின் அவலக் குரல் கேட்டது. பாவம், குளிர் தாங்கவில்லை போலும். இவற்றை எடுத்து வந்து மேலே என் வீட்டு வரவேற்பு அறையில் ஒரு சாக்கை விரித்துப் படுக்க வைக்கலாமா என்று எண்ணினேன்.
      
       அடுத்த வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் ஏறிக் குதித்து அவற்றை எடுத்து வருவது ஒன்றும் பெரிய வேலை இல்லை தான். ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் பல உண்டு. முதலில், என்னிடம் டார்ச் லைட் இல்லை. இரவில் யாரை எழுப்பி டார்ச் லைட் இரவல் கேட்பது? செல் போன் வெளிச்சத்தை வைத்துக் கொண்டு ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் அடுத்த மனையில் பாம்புகள் நடமாட்டம் அதிகம். என் வீட்டிற்கும் அவை வருவதுண்டு. நாங்கள் அடிப்பதில்லை. நான் இந்த வீட்டைக் கட்டி இதில் முப்பது வருடம் வாழ்ந்திருக்கிறேன். யாரையும் பாம்பு கடித்தது இல்லை. கையைத் தட்டினால் ஓடி மறைந்து விடும். எங்களுக்கும் பாம்புகளுக்கும் அப்படி ஒரு எழுதப்படாத உடன்படிக்கை. ஆனால் இந்த அரைகுறை வெளிச்சத்தில் தெரியாமல் நான் பாம்பின் மேல் காலை வைத்துவிட்டால் அது அந்த ஒப்பந்தத்தை மதித்து நடக்குமா என்பது சந்தேகமே. 
     
      மேலும், குட்டிகளை எடுக்க முயன்றால் தாய் நாய் என்னை ஏதோ விரோதியாகக் கருதி கடித்து விடவும் கூடும். ஒரு புறாவுக்காகத் தன் உயிரைக் கொடுக்க முன்வந்த சிபி போல நாய்க்குட்டிகளுக்காக என் உயிரைக் கொடுத்து வரலாற்றில் இடம் பெற விருப்பமில்லை. ஆனாலும் இந்தச் சின்னஞ் சிறு பிராணிகளின் துன்பத்தைப் போக்க வழி தெரியாமல் இருக்கும் என் பலவீனத்தை நினைக்கும் போது வெட்கமாக இருந்தது. 
      
     குட்டிகள் மழைச் சத்தத்தோடு போட்டி போட்டுக் கத்திக் கொண்டிருந்தன. எனக்குத் தூக்கம் வரும் என்ற நம்பிக்கை இல்லை. அங்கேயே திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன். இதற்கிடையில் பாலிதீன் விரிப்பில் தண்ணீர் நிரம்பி குளம் போல் நடுவில் குழிந்து விட்டது. அதன் எடை தாங்காமல் மேலே வைத்திருந்த கற்கள் விழுந்து விடவே அத்தனை தண்ணீரும் குட்டிகள் மேல் தடதடவென்று கொட்டி மூழ்கடித்தது. அதனால் கத்தல் இன்னும் அதிகமாயிற்று.
   
     ஆண்டவனே, எனக்கு இவ்வளவு பெரிய உடலையும் அறிவையும் இத்தனை வசதிகளையும் கொடுத்திருக்கிறாய். இந்த  அற்ப ஜீவன்களுக்கு உதவ முடியாமல் இவற்றால் என்ன பயன்? அக்கம் பக்கத்தில் இத்தனை பேர் இந்தச் சத்தத்தை லட்சியம் செய்யாமல் தூங்கவில்லையா? எனக்கு மட்டும் ஏன் இப்படி மனம் சங்கடப்படுகிறது? முல்லைக்குத் தன் தேரையே பந்தலாக்கிய பாரியைப் பற்றியும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் பற்றியும் படித்ததை மற்றவர்களைப் போல மறந்துவிடாமல் நினைவில் வைத்திருப்பதாலா? செயல்படுத்தப்பட முடியாத நெஞ்சின் ஈரம் இருந்தும் ஒன்று தான், இல்லாததும் ஒன்று தான். திண்ணையில் சாய்ந்து யோசனை செய்து கொண்டே எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கி விட்டேன்.

      வழக்கமாகத் தேங்காய் பறிப்பவர் காலையில் வந்தார். அவருடன் எனக்கு முப்பது வருடப் பழக்கம். வாங்க ஐயா, எப்போ வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டுக் கொண்டே படியேறினார். அவருக்குப் பதில் முகமன் கூறிவிட்டு அவருடன் கொல்லைப் புறத்துக்குச் சென்றேன். பட்டண வாசியாப் போயிட்டீங்க, இருந்தாலும் ஊரை மறக்காம வந்திட்டுப் போயிட்டு இருக்கீங்களே. அதாங்க நல்லது. ஆனா, என்ன சொல்லுங்க, நம்ம ஊருக்கு ஈடு இந்த ஒலகம் பூராத் தேடினாலும் கெடைக்காதுங்க, என்ன சொல்றீங்க?” என்றார்.

      ஆமாம் என்று ஒப்புக் கொண்டேன். மரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு காலில் நார் வளையத்தை மாட்டிக் கொண்டு விறுவென்று மரம் ஏற ஆரம்பித்தார்.

                “அந்த மூலையிலே நாய் குட்டி போட்டிருக்கு. அந்தப் பக்கம் காய் விழாமல் பாத்துங்கண்ணே.”

              “சரிங்க.”
      
    அவருக்கு வயது எண்பது இருக்கும். அவரை மரம் ஏறச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கும் அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. அவருக்கும் பிழைக்க வேறு வழி இல்லை. இரண்டு பிள்ளைகள் துபாயில் இருக்கிறார்கள். பணம் காசு அனுப்புவதில்லை. ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். நீங்கள் மரம் ஏறுவதை விட்டு விட்டு ஏதேனும் சின்னதாக வியாபாரம் செய்யலாமே, நான் வேண்டுமானால் பணம் தருகிறேன் என்றேன். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நீங்க கவலைப் படாதீங்க ஐயா. என்னை முருகன் காப்பாத்துவான் என்று உறுதியாகக் கூறுவார். அவர் மரம் ஏறி இறங்கி வரும் வரையில் என் வாய், காக்க காக்க, கனக வேல் காக்க என்று புலம்பிக் கொண்டிருக்கும்.

      தேங்காய்களைப் பறித்துப் போட்டு, இறங்கி வந்து, எல்லாவற்றையும் குவித்து விட்டு என்னிடம் காசு பெற்றுக் கொள்ளும் நேரத்தில் என்னைப் பார்த்தவர், ஏன் ஐயா, மொகம் ஒரு மாதிரி இருக்கு? ஒடம்பு நல்லா இல்லையா?” என்றார்.

      நான் முதல் நாள் இரவுக் கதையைச் சொன்னேன். அவர் அதைக் கேட்டு விட்டு, இதுக்குப் போயா இவ்வளவு அலட்டிக்கிட்டீங்க? நாய்க் குட்டிங்க அப்படித் தான் கத்தும். கத்தக் கத்தத் தான் அதுக்கு பலம். மனிசக் கொழந்தைகளுக்கும் அப்படித் தான். என்றார்.

      ஆனா ரெண்டு நாளா இப்படிக் கத்தல்லியே. மழையிலே நனைஞ்சதனாலே தானே கத்துது. இப்படி ரொம்ப நேரம் நனைஞ்சா செத்துடாதா?”

      பூனைக்கும் ஆட்டுக்கும் தாங்க மழை ஆவாது. மத்த எந்தப் பிராணிக்கும் ஒண்ணும் செய்யாதுங்க. முருகன் ரெயின் கோட்டு போட்டுத் தான் பூமிக்கு அனுப்பறான். மனுசனுக்கும் அப்படித் தாங்க. ஒங்களைப் போல ஆப்பீசிலே ஒக்காந்து வேலை செய்யறவங்க தான் மழைலே நனைஞ்சா சளி புடிக்கும்பீங்க. எங்களைப் போல வய வெளிலே கெடக்கிறவங்க கொடையைப் புடிச்சிக்கிட்டா வேலை செய்ய முடியும்? நனைவோம், காய்வோம். ஒண்ணும் ஆகாதுங்க.

      உண்மை தான் அவரைப் பார்த்தாலே தெரிகிறது. அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி என்று பாரதியார் சொன்னபடியான வைரம் பாய்ந்த உடல் அது.
      மழை அதுக்குப் பாதிக்காதுன்னா பின்னே ஏன் அது கத்துது?”
      நாப்பது வயசிலே நாய்க் கொணம்னு சொல்றாங்கள்ல, அது என்ன கொணம்னு தெரியுமா ஐயா ஒங்களுக்கு?”
      நன்றியோட இருக்கறது.
      அது ஒசந்த கொணமில்லே. ஆனா நாய்க் கொணம்னு கேவலமால்ல சொல்றாங்க.
      அது என்ன கேவலமான நாய்க்குணம்? யோசித்துப் பார்த்தேன். புலப்படவில்லை.
      சொல்லுங்க.
      நம்ம வீட்டுக்கு யாராவது புதுசா வந்தா நாய் குலைக்குது. அவங்களே அடிக்கடி வந்தா அது குலைக்கிறதை நிறுத்திக்குது இல்லையா?”
      ஆமாம்.”

      நாய்க்குப் புதுசா எதுவானாலும் புடிக்காது. அது தான் அதோட பொறவிக் கொணம். குட்டிங்க பொறந்து நாலஞ்சு நாளைக்கு கண் மூடியிருக்கும். கண்ணெத் தொறந்து பாத்தா ஒரே வெளிச்சமா இருக்கா, அந்த வெளிச்சம் அதுக்குப் புடிக்காது. கத்தும். அப்புறம் அது பழகிப் போயிடும். ராத்திரிலே இருட்டைக் கண்டா புதுசா இருக்கா, கத்தும். அப்புறம் அதுவும் பழகிப் போயிடும். இப்போ மழை பெய்யிறது இதுகளுக்குப் புதுசு. புடிக்கல்லே. கத்துது. அது பழகற வரைக்கும் கத்திக் கிட்டு தான் இருக்கும்.        

      அப்படியா? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஈவு இரக்கம் இல்லாமல் தூங்குகிறார்கள், நான் மட்டும் தான் ஏதோ புத்தர், ஏசு, காந்தியின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேனே. அவர்கள் எல்லோரும் விஷயம் தெரிந்தவர்கள்.

      முழுக்கக் கேளுங்க ஐயா. மனுசப் பயலுக்கு நாப்பது வயசாச்சின்னா இந்த நாய்க் கொணம் வந்திடும். புதுசா எது வந்தாலும் புடிக்காது. புது ஊரிலே குடியேற மாட்டான். அப்படிப் போனாலும் எங்க ஊரு மாதிரி ஆகுமான்னு சொல்லிக்கிட்டு இருப்பான். புதுசா தொழில் ஆரம்பிக்க மாட்டான். கஷ்டமோ நஷ்டமோ பழைய வேலயையே தான் செய்வான்.

      சின்னப் புள்ளைங்களைப் பாருங்க. எப்போப் பாத்தாலும் புதுப் புது விஷயங்களைத் தேடிப் போயிட்டு இருப்பாங்க. பொறந்த கொழந்தை தெனம் ஒரு புது வெளையாட்டு வெளையாடுது. புதுசு புதுசா வார்த்தை கத்துக்குது. புதுப் புது சினேகிதம் ஏற்படுத்திக்கிட்டு பழகுது. அது தான் எப்பவும் சந்தோஷமா இருக்குது.

      உண்மை தான். புது மனிதர்கள், புது விஷயங்கள் என்றால் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு தானே அணுகுகிறோம்.

      எங்க முருகனைத் தகப்பன் சாமிம்பாங்க. அப்பனுக்கே உபதேசம் பண்ணினவனுங்க. அதுக்கு என்ன அர்த்தம்? புதுப் புது விஷயங்களைப் பாத்து பயப்படாம அதை அதை அப்படி அப்படியே ஏத்துக்கணும்னு அதை மறந்து போன பெரியவங்களுக்குச் சின்னப் புள்ளைங்க தான் சொல்லித் தர  முடியும். 

      முற்றிலும் உண்மை. பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவது எனக்கு நினைவுக்கு வந்தது. ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.


      முருகன் சிவனுக்கு ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்த கதையில் இவ்வளவு பெரிய சூட்சுமம் இருக்கிறதா? எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டார் படிப்பறிவில்லாத இந்த மரமேறி!

பிராயச்சித்தம்

(இந்த என்னுடைய கதை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஓம் சக்தி மாத இதழில் வெளிவந்தது)
      மூடிய கதவுக்கு வெளியே பெருங் கூட்டம். எல்லோர் முகத்திலும் சோகம் கப்பியிருந்தது. அவ்வப்போது சிலர் தணிந்த குரலில் பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் ஜபம் செய்து கொண்டிருந்தனர்.
அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே,
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே,
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும்
எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.
      இந்த ஜபத்தைத் திரும்பத் திரும்பக் கூறித் தங்கள் மனத் துயரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
      அறையின் உள்ளே அவரது அன்புக்குப் பாத்திரமான ஃபாதர் சின்னசாமி படுத்திருக்கிறார். ஒரு வாரமாகக் கண் திறக்கவில்லை. உணவு தண்ணீர் இல்லை. அருகில் இரண்டு அணுக்கத் தொண்டர்கள் அவரது தேவையை உணர்ந்து செயல்படத் தயாராக இருந்தனர். அவ்வப்போது கதவைத் திறந்து அவரது உடல் நிலை பற்றிய செய்தியை வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியப் படுத்தினர்.
      ஃபாதர் அசையாமல் படுத்திருந்தார். அவரது மூடிய கண் இமைகளில் ஒரு சுழிப்பு. உதடுகளில் லேசான அசைவு. ஏதேனும் சொல்ல விரும்புகிறாரோ? குனிந்து காது கொடுத்தனர்.
அருள் நிறைந்த அன்னையே வாழ்க
      ஆகா, எப்பேர்ப்பட்ட தூய உள்ளம்! தன் நிலை மறந்த நேரத்திலும் இறை வழிபாட்டை மறக்கவில்லையே என வியந்தனர்.
      ஃபாதரின் உடல் தான் கிழித்த நாராகக் கிடந்ததே தவிர, அவரது மனதில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. காட்சிகள் அவரது மனக் கண் முன் விரிந்து கொண்டிருந்தன.
      இதோ ஒரு குளத்தங்கரை மண்டபம். சிறுவர்களும் பெரியவர்களுமாகப் பல ஆண்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர். ஒரு சிறுவன் அவர்களிடையே பரபரப்பாக ஓடி ஓடிப் பூணூல் வினியோகித்துக் கொண்டிருக்கிறான்.       
                “சுப்புணி, எல்லாருக்கும் பூணூல் குடுத்துட்டயா?” அவனது தந்தை கேட்கிறார். அவன் தலை அசைத்ததும் கூட்டத்தைப் பார்த்து ஆரம்பிக்கலாமா?’ என்று கேட்டு விட்டு சுக்லாம்பர தரம் விஷ்ணும் .....  சொல்கிறார். கூட்டம் அவரது சொற்களை எதிரொலிக்கிறது.
      இதோ மற்றொரு காட்சி.
      பள்ளிக் கூடம். இடைவேளை. சுப்புணி தனியே உட்கார்ந்திருக்கிறான். தலைமை ஆசிரியர் அங்கு வருகிறார்.
ஏண்டா, சாப்பிடலையா?”
இல்லை, ஃபாதர்.
அம்மா சாதம் கட்டிக் கொடுக்கல்லியா?”
இல்லை ஃபாதர்.
என் அறைக்கு வா. காசு தரேன். ஓட்டல்லே போய் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிடு.
வேண்டாம், ஃபாதர்.
ஏண்டா?”
பிறத்தியார் கிட்டே வாங்கிக்கக் கூடாது என்று எங்கம்மா சொல்லியிருக்கா, ஃபாதர்.
உங்கப்பா புரோகிதர் தானேடா. அவர் பிறரிடம் தானம் வாங்கறது இல்லையா? அது தேவலாம் என்றால் இதுவும் தப்பில்லை. வாங்கிக்க.
இல்லே, ஃபாதர். எங்கப்பா தானம் வாங்கினா, கொடுத்தவாளுடைய நன்மைக்காக ஜபம் பண்ணுவார், அல்லது காவேரி ஸ்னானம் பண்ணுவார், ஃபாதர்.
அந்த மாதிரி நீயும் இதை இப்ப வாங்கிக்க, பின்னாடி எனக்காகவும் இந்த ஸ்கூலுக்காகவும் ஜபம் பண்ணிடு.
      வாதத்தில் தோற்றுப்போன சுப்புணி வயிற்றுப் பசி தீர்க்கக் கை நீட்டுகிறான்.
      அந்தக் காட்சி மறைகிறது. அடுத்த காட்சி விரிகிறது.
      ஒரு விதவைத் தாய்.
வாடா சுப்புணி, சந்தியா வந்தனம் பண்ணிட்டுவா, சாப்பிடலாம். காலம்பறலேர்ந்து சாப்பிடலை, பாவம்.
இல்லேம்மா, மத்தியான்னம் ஸ்கூல்லே சாப்பிட்டுட்டேன்.
யார்டா சாதம் போட்டா?”  
சொல்கிறான்.
போன வருஷம் ஒரு நாள் நீ அந்த மாதிரி சாப்பிட்ட போதே, அது தப்புன்னு சொன்னேனே அப்பா. கண்டவா கிட்டேயும் வாங்கிக்கக் கூடாதுடா. உங்கப்பா எல்லார் கிட்டேயும் தானம் வாங்கிட மாட்டார். யார் சாதம் போடறாளோ அவா குணம் நமக்கு வந்துடும்னு, நல்ல சத்துக்கள் வீட்டிலே தான் சாப்பிடுவார்.
இல்லேம்மா, ஃபாதர் ரொம்ப நல்லவர். நான் நன்னாப் படிக்கறேன்னு எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பார்ம்மா.
      காட்சி மாறியது.
                அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறாள், வாண்டாண்டா சுப்புணி, சொன்னதைக் கேளுடா, எனக்கு ஒரு கொள்ளி போட்டுட்டு நீ எப்படி வேணுமானாலும் போ. அவன் கையிலே சோறு வாங்கித் தின்னு அவன் புத்தியே உனக்கு வந்துடுத்தேடா.
      சுப்புணியும் கெஞ்சுகிறான். மதம் தான் மாறுகிறேனே தவிர, உன் பிள்ளை என்பது இல்லாமல் போகமாட்டேன் அம்மா. உன்னை மறக்க மாட்டேன்ம்மா. அப்பா இறந்தபின் எனக்காக நீ எப்படி உழைச்சு ஓடாப் போயிருக்கேங்கிறதை நான் பாத்துண்டு தானே இருக்கேன். எத்தனை வீட்டிலே பத்துப் பாத்திரம் தேச்சிருக்கே, எத்தனை கல்யாணத்திலே கல்லைக் கட்டி இழுத்து மாவு அறைச்சிருக்கே, இனிமே நீ கஷ்டப்பட வேண்டாம்மா. அடுத்த மாசத்திலேருந்து எனக்குச் சம்பளம் வரும். நீ சௌகர்யமா இருக்கலாம். உன்னைக் காப்பாத்தறது என் கடமை. நான் மறக்க மாட்டேம்மா.
அதே நேரத்திலே எனக்கு இன்னொரு கடமையும் இருக்கும்மா. எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்துப் படிக்க வைச்சு நான் பட்டினி கிடக்க நேரிட்ட போதெல்லாம் என் முகம் பாத்து சாப்பாடு போட்ட மதத்துக்கும் நான் நன்றி செலுத்தணும் அம்மா.
அதுக்காக மதம் மாறித் தான் நன்றி செலுத்தணுமோ? இந்துவா இருந்துண்டே அவா நன்மைக்கு நீ உழைக்கப்படாதா?”
...........
      அன்று அவன் தான் செய்தது சரி என்று கருதி வீட்டை விட்டு வெளியேறி விட்டான். அம்மா அவனை அதன் பின் வீட்டில் அனுமதிக்கவில்லை.
      ஆயிற்று. அறுபது வருஷங்கள். எத்தனை பிரசங்கங்கள்! எத்தனை கூட்டங்கள்! எத்தனை  பேருக்கு ஆறுதல் அளித்திருக்கிறார் ஃபாதர் சின்னசாமி! ஆனால் அந்த ஒரு ஜீவனுக்கு மட்டும் அந்திம காலத்தில் அவர் ஆதரவாக இருக்க முடியவில்லையே! மரண நேரத்தில் அந்த நினைவு வந்து வேதனை துளைக்கிறதே! ஜபம் சொல்லிப் பார்க்கிறார் ஃபாதர்.
அருள் நிறைந்த அன்னையே வாழ்க..
      என்னவோ இன்றைக்கு மரியே என்பதற்குப் பதில் அன்னையே என்ற சொல் தான் உள்ளத்தில் சுழல்கிறது. அவரது அன்னையைப் பொறுத்தவரை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! பெண்களுக்குள் அவள் ஒரு ரத்தினம் அல்லவா? என்ன தியாகம்! இருந்த ஒரே பிள்ளையை, வயதான காலத்தில் காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தவனை உயிருடன் தியாகம் செய்தவள் எவ்வளவு பெரிய மனது உடையவள்! ஆனால் அவளுடைய திருவயிற்றின் கனியாகிய நானோ பாவிகளுக்கெல்லாம் மேலான பாவியாகி விட்டேனே. எத்தனை பேருடைய பாவங்களுக்கு நான் மன்னிப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பிரத்தியட்சமான அன்னையைக் கடைசிக் காலத்தில் வறுமையில் வாட விட்டேனே!’
      அவளுக்குத் தான் என்ன மன உறுதி! நான் அனுப்பிய பணத்தை விரலால் கூட தொட மாட்டேன் என்று மறுத்து விட்டாளே! அவளைப் பார்க்கக் கூட என்னை அனுமதிக்கவில்லையே! தான் பிறந்த மதத்தை அவள் நேசித்தது தவறா? வந்து குடி புகுந்த மதத்தை நான் நேசிக்கவில்லையா? நான் பிறந்த மதத்தை விட்டு வந்தது சரியா? என் தாயைத் தவிக்க விட்டது சரியா?
      இது என்ன, இத்தனை நாள் இல்லாமல் அறுபது வருஷம் கழித்து இந்த சிந்தனை? அன்னையே, என் மரண நேரத்தில் எனக்காக வேண்டிக் கொள்ள மாட்டாயா?’
      வெறும் ஜபம் செய்தால் மட்டும் ஒருவன் பாவங்களிலிருந்து  தப்ப முடியாது. அவன் மனம் வருந்திப் பரிகாரமான செயல்களும் செய்து தான் திருந்தியதைத் தன் மனம் ஒப்பும் வகையில் நிரூபிக்க வேண்டும்.
      அவர் மற்றவர்களுக்கு உபதேசித்த வார்த்தைகள் அவர் காதில் ரீங்காரமிட்டன. என்ன செய்யலாம்? நாக்கைக் கூட அசைக்க முடியாத இந்த நிலையில் என் மனம் வருந்தியதை நிரூபிக்கும் பரிகாரம் நான் என்ன செய்ய முடியும்? அன்னையே, எனக்கு சக்தி கொடு.
      அவரது உதடுகள் மெல்ல அசைந்தன. அணுக்கத் தொண்டர்கள் குனிந்து அவர் வாயருகே காதை வைத்துக் கேட்டனர்.
வைத்தி, வைத்தி
                “யார் வைத்தி என்பது?” ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மீண்டும் அவரது உதடு அசைந்தது.
வைத்தி, பாஸ்கரராஜபுரம், பார்க்கணும்.
      தங்கள் தெய்வத் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றத் தொண்டர்கள் பறந்தனர். எப்படியெல்லாமோ விசாரித்து வைத்தியைக் கொண்டு வந்துவிட்டனர்.
      அங்குக் கூடியிருந்த கூட்டத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத தோற்றம். குடுமி, துண்டு மட்டும் போர்த்திய மார்பு, பூணூல், பஞ்சகச்சம், நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம்.
      கூசிக் கொண்டு உள்ளே நுழைந்தார் வைத்தி. அவரது பால்ய நண்பன் சுப்புணி கட்டிலில் நார் போலக் கிடந்தான்.
      எவ்வளவு அன்யோன்யமாக இருந்தார்கள்! சுப்புணி வீட்டை விட்டு வெளியேறு முன் தாயையும் மகனையும் சேர்த்து வைக்க எத்தனை முயற்சிகள் செய்திருக்கிறார் இந்த வைத்தி. பின்னர் இவர் மூலம் தான் சுப்புணி அம்மாவுக்குப் பணம் அனுப்பினான். அம்மா காரியமும் சுப்புணி தான் செய்தார். அதன் பின் அவருடைய தொடர்பு விட்டுப் போயிற்று.
      உட்கார்.”
      ஜாடை காட்டினார் சின்னசாமி. வைத்தி கூசிக் கொண்டே ஸ்டூலில் உட்கார்ந்தார்.  அவரை எப்படிக் கூப்பிடுவது? சுப்புணி என்று கூப்பிடுவதா? சார் என்றா? எல்லோரையும் போல ஃபாதர் என்றா?’
      இருந்த சக்தி எல்லாம் திரட்டி ஃபாதர் பேசினார், மெதுவாக, ஆனால் நிதானமாக.
என் கணக்கிலே கொஞ்சம் பணம் இருக்கு. அதை நம்ம ஊர் வேத பாடசாலைக்கு சேர்ப்பித்து விடு.  இந்த என் கடைசி ஆசையை நிறைவேத்துவியா?”
      அவரது குறிப்பு உணர்ந்த தொண்டர் அவரது செக் புத்தகத்தை நீட்டினார். நடுங்கும் கைகளால் அதில் கையெழுத்துப் போட்டு வைத்தியிடம் கொடுத்தார் ஃபாதர்.
      அடுத்த கணம் விவரிக்க முடியாத அமைதி அவரது உள்ளத்தில் தோன்றியது. அவரால் முடிந்த பரிகாரம் செய்துவிட்டார். மனம் லேசாகிக் காற்றில் பறப்பது போன்றும் தன் உடலைத் தானே மேலிருந்து பார்ப்பது போலவும் உணர்ந்தார். கண்கள் ஒரு கணம் மின்னின, பின் மூடிக் கொண்டன. அறுபது ஆண்டுக் காலம் இறை பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தது.

      அவரது நண்பர் வைத்தி-  அவரைப் போலவே அறுபது ஆண்டு காலம் புரோகிதத் தொழில் செய்து மற்றவர்களின் நன்மைக்காக வேண்டுவதிலேயே காலம் கழித்த அந்தக் கிழவர் அந்த இடத்தை விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியேறினார்.   

பணப்பொருத்தம்

 1 டிர்ரிங்.. டிர்ரிங்..
ஹலோ
“…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம்.
சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”
அவன் எம்.எஸ்சி படிச்சுட்டு காலேஜிலே லெக்சர..............
சாரி. நாங்க ப்ரொபஷனல் மாப்பிள்ளையாப் பார்க்கிறோம்.
இதுவும் ப்ரொபஷன் தானே.
சாரி. டாக்டர், எஞ்ஜினீயர்னா பேசுங்க. இல்லாட்டி போனை வெச்சுடுங்க.
*  *   *

2 டிர்ரிங்.. டிர்ரிங்
ஹலோ
“…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம்.
சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”
அவன் பி.டெக். படிச்சுட்டு மெட்ராஸ்லே டைடல் பார்க்லே ஒரு கம்பெனிலே சாப்ட்வேர் இஞ்ஜினீயரா வேலை பார்க்கிறான்.
பி.டெக். எந்த காலேஜ்? ”
சேலம்.
சாரி. அண்ணா யுனிவர்சிட்டி, ஐ.ஐ.டி அல்லது பிலானிலே படிச்ச பையனா இருக்கணும். என் பெண்ணும் பி.ஈ. அதை விட அதிகம் படிச்சவரா, பாரின்லே எம். எஸ். முடிச்சு பாரின்லே வேலை பார்க்கிற பையன் தான் வேணும்.
*  *  * 

3 டிர்ரிங்.. டிர்ரிங்
ஹலோ
“…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம்.
சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”
அவன் சென்னை ஐ.ஐ.டி.லே பி.டெக். படிச்சுட்டு யு. எஸ்லே எம். எஸ் பண்ணினான். இப்போ பாஸ்டன்லே வேலை பார்க்கிறான். எங்களுக்கு இங்கே அடையாறிலே ஒரு பங்களா இருக்கு. நீலாங்கரையிலே பையன் பேரிலே ஒண்ணு வாங்கி இருக்கோம். அப்புறம் கொடைக்கானல்லே ஒரு பங்களாவும் எஸ்டேட்டும் இருக்கு. ”
 “வெரி குட். நீங்க பெண் பார்க்க எப்ப வரீங்க? ”
பையன் அடுத்த மாசம் தான் வருவான். நானும் என் வீட்டுக்காரரும் வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு வரோம். உங்க விலாசத்தைக் குடுங்க.
*   *     *  

4 டிர்ரிங்.. டிர்ரிங்..
ஹலோ
ஆண்ட்டி, நான் பாஸ்டன்லேருந்து பாஸ்கர் பேசறேன். பானு போன் வேலை செய்யல்லியா? ”
ஒரு நிமிஷம்.
பானு, மாப்பிள்ளே கூப்பிடறார்டி. ஏன் உன் போன் என்னாச்சு? ஏன் லேண்ட் லைன்லே கூப்பிடறார்? ”
பாட்டரி லோ. ஆப்ஃ ஆயிடுத்தும்மா. சார்ஜ் பண்ணலாம்னா கரண்ட் இப்பத் தானே வந்திருக்கு.
என்ன பொண்ணும்மா நீ. அவர் தான் தினமும் இந்த நேரத்துக்குக் கூப்பிடறார்னு தெரிஞ்சிருக்கே. முன்னுக்கு முன்னதா சார்ஜ் பண்ணி வெச்சுக்க வேண்டாமா? ”
*   *    *

5 டிர்ரிங்.. டிர்ரிங்..
ஹலோ
நான் பானு பேசறேம்மா. நான் நாளைக்குப் புறப்பட்டு சென்னைக்கு வரேம்மா.”
என்னடி இப்ப திடுதிப்புன்னு. இனிமே அடுத்த வருஷம் தான் லீவு எடுக்க முடியும்னு மாப்பிள்ளே சொன்னாரே. மாப்பிள்ளையும் வராரா? ”
அவன் வரல்லேம்மா. நான் மட்டும் தான் வரேன்.
என்னடி இது? மாப்பிள்ளையைப் போய் அவன் இவன்னு பேசறே.
அவன் எனக்குப் புருஷனும் இல்லே. உனக்கு மாப்பிள்ளையும் இல்லே.
என்னடி சொல்றே நீ? ”
ஆமாம்மா நான் ஒரேயடியா வந்திடறேன். லக்கேஜ் ஹெவியா இருக்கு. ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க.
ஏண்டி? என்னடி ஆச்சு? ”
பின்னே என்னம்மா. தேடித் தேடி அமெரிக்க மாப்பிள்ளையைப் புடிச்சியே. சுத்த பழய பஞ்சாங்கம்மா.
என்னடி சொல்றே? ”
கொஞ்சம் கூட நாகரிகமா நடந்துக்கத் தெரியல்லே, அம்மா, அவனுக்கு. எப்போ பார்த்தாலும் பூஜை புனஸ்காரம். ரூமுக்கு ரூம் ராமகிருஷ்ணர், ரமணர், சாயிபாபான்னு சாமியார் படம் தான். அலமாரி பூரா விவேகானந்தர் புஸ்தகங்கள் தான். ஒரு க்ளப்புக்குப் போனோம், ஒரு டிஸ்கொதேயிலே கலந்துகிட்டோம் ஒண்ணு கிடையாது. ஒரு பீர் கூட குடிச்சதில்லையாம். வெளியிலே கூட்டிகிட்டுப் போனா, கோவில் இல்லாட்டா பஜனை, இந்த மாதிரித் தான். அமெரிக்காவிலே இருக்கிறவன் கொஞ்சம் நாகரிகமா இருப்பான்னு நெனச்சேன். இந்தக் கொட்டாம்பட்டியோட காலம் தள்ள முடியாது என்னாலே.
ஏண்டி, நிச்சயம் பண்ணி கல்யாணம் நடக்கிற வரைக்கும் ஆறு மாசம் நாள் தவறாமே போன்லே மணிக்கணக்காப் பேசினியே. என்னடி தெரிஞ்சுகிட்டே அவரைப் பத்தி? ”

அப்பல்லாம் நிறைய ஜோக் சொல்லிச் சிரிக்க வெச்சுக்கிட்டே தான் இருந்தான்.  நான் இந்த மாதிரித்தான் இருப்பேன்னு அவன் சொன்னப்போ, அமெரிக்காவிலே இருந்துகிட்டு இந்த மாதிரி யாராவது இருப்பாங்களா, விளையாட்டுக்குச் சொல்றான்னு தான் நான் நெனைச்சேன். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் நாம மாத்திடலாம்னு நெனச்சேன். அது முடியாதுன்னு தீர்ந்து போச்சு. நான் நாளை ராத்திரி பதினோரு மணிக்கு வருவேன். ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க.